கொரோனா பரவலில் இருந்து சிங்கப்பூர் சமூகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது விடுதிகளிலேயே மாதக் கணக்கில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நாள்கள் செல்லச் செல்ல, அவர்களில் பலரும் தங்களது மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டதாகத் தொண்டூழியர்களிடம் தெரிவித்தனர்.
மற்றவர்களைக் காட்டிலும் தங்கும் விடுதி ஊழியர்களின் மனநலச் சவால்கள் வேறுபட்டவை என்று மனநல ஆலோசகர் ஆந்தியா ஓங் குறிப்பிட்டார்.
“இவ்வளவு காலத்திற்கு ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால் நிச்சயமாக அவரின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படும்,” என்றார் திருவாட்டி ஓங்.
“இதற்குமுன் கடத்தல் பிரச்சினையை நாம் எதிர்கொண்டது இல்லை. இப்போது, தனிமைப்படுத்தலின் விளைவாக அது நிகழ்ந்திருக்கலாம்,” என்று அவர் சொன்னார்.
மந்தமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், இத்தகைய குறுகியகால நிவாரணத்திற்கான வாய்ப்பைப் பற்றிக்கொள்ள ஊழியர்கள் தூண்டப்பட்டிருக்கலாம் என்று திருவாட்டி ஓங் கூறினார்.
“நிலைமையைச் சமாளிக்க ஒருவேளை இது அவர்களுக்கு உதவி இருக்கலாம். தங்களுடைய நண்பர்களுக்கும் வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் தாங்களே கடத்தல் முயற்சியில் இறங்கி இருக்கலாம்,” என்றார் அவர்.
“அவர்கள் விதிகளை மீறியது தெளிவாகிறது. அதை மன்னிக்க முடியாது. ஆனால், இதை நாம் கருணைவிழி கொண்டு பார்க்க வேண்டும். உடனடியாக அவர்களுக்கு மனநல ஆதரவை விரிவுபடுத்த வேண்டும்,” என்றும் திருவாட்டி ஓங் வலியுறுத்தினார்.
இதுபோன்ற செய்திகளைக் கேட்க வருத்தமாக உள்ளது என்றார் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் திருவாட்டி தீபா சுவாமிநாதன்.
“இதுபோன்ற கடத்தல் செயல்கள் பெரும் தீங்கு விளைவிக்கும், தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றார் திருவாட்டி தீபா.
ஊழியர்கள் பலரிடத்தில் ஏற்கெனவே பணமிருக்காது என்ற அவர், மனஅழுத்தத்தில் இருந்து, கவலையில் இருந்து தற்காலிகமாக விடுபடுவதற்காக அவர்கள் கடன் வாங்கவும் நேரிடலாம் என்றும் சொன்னார்.
“ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அது மேலும் அவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றும் திருவாட்டி தீபா கூறினார்.
ஊழியர்களின் தேவைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பேற்றவர்களே அத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தால் அது நம்பிக்கை மோசடிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்கள் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை முன்களத்தில் இருக்கும் அவர்களே நன்கறிவர் என்ற திருவாட்டி தீபா, “ஊழியர்களின் வாழ்க்கையை அவர்கள் மோசமாக்கிவிடக்கூடாது,” என்றும் சொன்னார்.