ஓராண்டு காலத்துக்கு மேலாக, உற்சாகமான ஒன்றுகூடல்களை யும் கொண்டாட்டங்களையும் தடுத்துவிட்டது கொவிட்-19 சூழல். நிலைமை சரியாகிவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் சமூகத்தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கூடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, நிகழ்ச்சிக்கு முன்னதாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் திருமணத்திற்கு 100 பேர் வரை அழைக்கலாம். இல்லையெனில் 50 பேரை மட்டுமே அழைக்க முடியும்.
எஸ்.வெங்கடேஷ்வரன்
என் திருமணம் நெருங்குகிறது. ஜூன் மாதம் 13ஆம் தேதி என சென்ற ஆண்டே தேதி குறித்துவிட்டோம். திருமண மண்டபம், உணவு, ஆடை, ஆபரணம், புகைப்படம், காணொளி, திருமண அழைப்பிதழ்கள் அச்சிடுவது என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சமூகத்தில் கிருமித்தொற்று வெகுவாகக் குறைந்ததால் வேலையிடத்திற்குத் திரும்பலாம், எட்டு பேர் வரை கூடலாம் என விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. மனதில் நம்பிக்கை பிறந்தது. நல்ல வேளையாக திருமணத்தை ஜூன் மாதம் வைத்தோம் என்று மகிழ்ந்தேன்.
விரைவில் சூழ்நிலை சீராகி மீண்டும் சமூக நடவடிக்கைகள் வழக்கநிலைக்குத் திரும்பும் என்று நம்பினேன்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என்று மனதிற்கு நெருங்கியவர்கள் உட்பட என் வளர்ச்சிக்கு காரணமான அனைவரும் என்னை வந்து வாழ்த்தி செல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால் மீண்டும் சமூகத்தில் தொற்றுப் பரவத் தொடங்கியது. மோசமாகி வரும் கொவிட்-19 சூழலைக் கருதி, சென்ற வாரம் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
புதிய நடைமுறைக்கு ஏற்ப 50 பேரை மட்டுமே அழைக்க எண்ணியுள்ளேன். அழைக்கத் திட்டமிட்டிருந்த பலரையும் கூப்பிட முடியாது. திருமணத்தை நேரலையில் ஒளிபரப்புவதுதான் அதிகபட்ச சாத்தியம் என்பதால் ஒவ்வொருவராக அழைத்துச் சொல்லி வருகிறேன்.
எனக்காவது கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது. சிலருக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.
மே 16ஆம் தேதி திருமணம் செய்த 32 வயது திரு ரகுராஜ் நாயுடு, 29 வயது திருமதி த.ஷாலினி தம்பதிக்கு ஒரே நாளில் திருமண ஏற்பாடுகளை மாற்ற வேண்டியநிலை. ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தில் திருமணத்தை நடத்திய இவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.
“100 பேரிலிருந்து 50 பேராக விருந்தினர் பட்டியலைக் குறைக்க 24 மணி நேர அவகாசமே இருந்தது. அழைத்தவர்களை வரவேண்டாம் என்று சொல்ல மிகவும் சங்கடமாக இருந்தது. யாரைக் கூப்பிடுவது யாரை விடுவது எனப் புரியாமல் குழம்பிவிட்டோம். இதனால் உறவினர்களிடையே சர்ச்சையும் ஏற்பட்டது,” என்று வேதனைப்பட்டார் நிதித் துறையில் பணிபுரியும் திரு ரகுராஜ். சனிக்கிழமை, மே 15ஆம் தேதி மாலை தாலி படையல்.
அன்று காலையிலிருந்து கோயில் நிர்வாகம், இந்து அறக்கட்டளை வாரியம் என்று பல அமைப்புகளிடம் விதிமுறைகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. பின்னர் குடும்பத்தினர் பலரையும் அழைத்து ஏற்பாடுகளை மாற்ற வேண்டியிருந்தது.
ஆலயம் 100 பேர் வரையில் அனுமதித்தாலும் நிகழ்வுக்கான கிருமி பரிசோதனை சேவை வழங்கும் நிறுவனங்கள், ஏற்பாடுகளைச் செய்ய குறைந்தபட்சம் ஒரு வாரம் தேவை.
“மிக நெருக்கத்தில் இருந்ததால் தேதியைத் தள்ளி வைப்பதும் சாத்தியமாகாது. திருமணத்தில் ஏதாவது சிக்கலா என்று பேச்சு வரும். கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கல்யாணத்தை நடத்தினோம்,” என்றார் ரகுராஜ்.
சிரம காலத்தில் பல தரப்புகளும் உதவுகின்றன. ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயம், மண்டபக் கட்டணத்தில் $1,000ஐ குறைத்துள்ளது. எனினும், கடைசிநேரத்தில் பலவற்றையும் மாற்றியமைக்க முடியாமல் மிகவும் தவித்துவிட்டனர் ரகுராஜ் தம்பதியினர்.
ஓர் ஆண்டு தள்ளி வைத்தும் ஏமாற்றம்
கடந்த ஆண்டு ஜூனில் மகளின் திருமணத்தை நடத்த இருந்த 51 வயது திரு பஷீர் அஹமது, கிருமித்தொற்று குறையும் என்ற நம்பிக்கையில் இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கு திருமணத்தைத் தள்ளி வைத்தார்.
“வழக்கமாக திருமணம் என்றால் எப்படியும் ஆயிரம் பேராவது வருவார்கள். கொரோனா சூழலில் முக்கியமான250 பேரையாவது அழைக்கலாம் என எண்ணி இருந்தோம்,” என்று கவலையுடன் தெரிவித்தார் திரு பஷீர்.
ஃபுட்சிங் மண்டபத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த பஷீர் குடும்பத்தினர், புதிய கட்டுப்பாடுகளால் நிகழ்வை ‘டேஸ்ட் ஆஃப் இந்தியா’ மண்டபத்திற்கு மாற்றிவிட்டனர். திருமணத்தை தள்ளி வைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானாலும் குறித்த நாளில் திருமணத்தை நடத்த அவர் முடிவுசெய்துள்ளார்.
“திருமணம் வாழ்வில் ஒருமுறை நடப்பது. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அந்த ஒருநாளில் அனைவரும் முகமலர்ச்சியுடன் காணப்படுவார்கள். விருந்தினர்கள் கூடி தம்பதியினரை வாழ்த்துவார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்றார் பஷீர்.
எனினும், நிலைமை மாறலாம், பலரது வாழ்த்துகளோடு மணநாள் காணலாம் என்ற நம்பிக்கையோடு சிலர் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனர்.
ஜூன் மாதம் திருமணம் செய்யவிருந்த 27 வயது ரூபன் கங்கேஸ், 27 வயது மிரோஷினி கண்ணதாசன் தம்பதி திருமணத்தை இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
“புது வீடு ஜூலையில் கிடைக்க உள்ளது. புதுப்பிப்பு பணிகள் உள்ளன. இதில் கொவிட்-19 சூழலில் திருமண ஏற்பாட்டைச் செய்வது அதிக மனஊளைச்சல் தரும். எனவே திருமணத்தைத் தள்ளி வைக்க முடிவெடுத்தோம்,” என்றார் அறிவியல் ஆய்வாளராக பணியாற்றும் திரு ரூபன்.
திருமணம் செய்வோர் மட்டுமின்றி, திருமண சேவை வழங்குவோரும் இந்தச் சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ஆறு முழுநேர ஊழியர்கள், கிட்டத்தட்ட 40 பகுதிநேர ஊழியர்களுடன் இயங்கும் ‘சில்வர்ஸ்டார் டெக்கோர்’ நிறுவனம் தற்போது மூன்று முழு நேர ஊழியர்கள், ஐந்து பகுதி நேர ஊழியர்களுடன் செயல்படுகிறது.
கடந்த 16 ஆண்டு காலமாக திருமண அலங்கார சேவை வழங்கும் சில்வர்ஸ்டார் நிறுவனம் எதிர்கொண்டிருக்கும் ஆக மோசமான பொருளியல் சூழ்நிலை இது என்றார் இதன் நிறுவனர் திரு பிரகாஷ் திவாகரன், 35.
வழக்கமாக ஒரு வாரத்திற்கு 15 திருமணங்கள் வரை சேவை வழங்கும் இந்நிறுவனம் தற்போது வாரத்திற்கு சராசரியாக மூன்று திருமணங்களுக்கே சேவை வழங்குகிறது.
“புதுக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படதுமே நான்கு திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன,” என்றார் திருமண புகைப்பட சேவைகள் வழங்கும் ‘பிக்பீட்ஸ் ஃபோட்டோகிராஃபி’ நிறுவனத்தை நடத்தும் செல்வி ஜெ.அனிதா, 39.
“ஆடி மாதம் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களிலும் வேலை இருக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏறக்குறைய 30 திருமணங்களுக்கு சேவை வழங்குவோம். இந்த ஆண்டு ஐந்து திருமணங்களுக்குத்தான் சேவை வழங்கினோம்,” என்றார் அனிதா.
கொவிட்-19 பரவத் தொடங்கியது முதல் தங்களது சேவைக்கான தேவை 70% குறைந்துள்ளதாக வருத்தப்பட்டார் ‘ஜெமினி கிராஃபிக்ஸ் & பிரிண்டர்ஸ்’ நிறுவனத்தை நடத்தும் 63 வயது திருமதி காந்தி தேவி. “திருமண அழைப்பிதழ்களை அச்சிடுவது எங்களது முக்கிய சேவை. ஆயிரம் பேருக்கு பத்திரிகை அடிப்போம். இப்போது 50, 100 பேருக்கு அடிக்கிறோம்,” என்றார் காந்தி.
என்றாலும் அலை ஓயும் வரையில் கடலில் குளிக்க காத்திருக்க முடியுமா.வீடு வாங்குவது, குடும்பத்தை அமைப்பது என்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்குப் போக விரும்புவோர் எவ்வளவு நாள்தான் காத்திருக்க முடியும். செலவுகளைக் குறைப்பதற்கு இதை வாய்ப்பாகக் கொள்ளலாம் என்றார் திருமதி காந்தி.
செலவு குறைந்தாலும், வாழ்வில் ஒருநாள் வரும் மணநாளை உற்றார், உறவினர், நண்பர்கள் சூழ மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.
நேரில் பெறும் வாழ்த்தைப்போல் இருக்காது என்றாலும் நேரலையில் ஆசி பெற்று நல்வாழ்வைத் தொடங்குவதே இன்றைய சூழலில் செய்யக்கூடியதாக உள்ளது.