தோக்கியோவின் கசுமிகாவோக்கா தேசிய விளையாட்டரங்கத்தில் 1964ஆம் ஆண்டு அணிவகுத்துச் சென்ற மலேசிய அணியில் இடம்பெற்றிருந்த சிங்கப்பூரின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் திரு கிருஷ்ணன் கோபாலன் 48,000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் ஆனந்தக்கூச்சலிட்டபோது மெய்சிலிர்த்துப் போனார்.
ஆசியாவில் முதல் முறையாக இடம்பெற்ற அவ்வாண்டின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவால் தோக்கியோவே களைகட்டியிருந்தது. உலகப் போருக்குப் பிறகு மீண்டெழும் மிகப் பெரிய நிகழ்வாக ஜப்பான் அந்த விளையாட்டு களைக் கருதியிருந்தது.
தமது 24வது வயதில் தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற கிருஷ்ணன், விளையாட்டுகளுக்கு முன்பே காயம்பட்டிருந்தாலும், அதைப் பற்றி வெளியே சொன்னால் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய்விடுமே என்ற அச்சத்தில் காயம் பற்றிய தகவலை மறைத்தார்.
காத்தோங் வட்டாரத்தில் வசித்த கிருஷ்ணன், தமது 12வது வயதில், 1953ல் காத்தோங் சிறுவர் மன்றத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தம்மை எதிர்த்த போட்டியாளரை சரமாரியாகக் குத்துகள் விட்டு வீழ்த்தி, அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
28.6 கிலோகிராம் எடைக்கு உட்பட்ட 'அட்டோம்வெயிட்' பிரிவின் வெற்றியாளரான கிருஷ்ணன், பின்னர் 'நாட்', 'மிட்ஜ்', 'மஸ்கிட்டோ' என பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று முன்னேறினார்.
சிங்கப்பூர் போலிஸ் படையில் சேர்ந்த கிருஷ்ணன், 1960ல் தாம் பங்கேற்ற 20க்கு மேற்பட்ட குத்துச்சண்டை போட்டிகளில் கிட்டத்தட்ட 25 போட்டிகளில் எதிராளியை 'நாக்அவுட்' செய்து வெற்றி பெற்றதாகக் கூறினார்.
"1964ல் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்த காலத்தில், நான் மலேசியப் பொது விருது குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதால், தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்க தேர்வுபெற்றேன்," என்றார்.
தோக்கியோ ஒலிம்பிக் போட்டி களுக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருந்த சமயத்தில் தமது வீட்டில் இருந்த இரண்டு 'அல்சேஷன்' ரக நாய்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன.
அவற்றைப் பிரித்துவிட ஒரு நாயின் வாயைப் பிடித்து தடுத்தபோது அதன் பல் பட்டு அவரது இடது கை விரலில் காயம்பட்டதால், விரல் நகத்தை அகற்ற வேண்டியதாயிற்று.
தோக்கியோவில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவரது காயம் காரணமாக குத்துச்சண்டை போட்டியில் அவர் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டார். அவரிடம் கிருஷ்ணன் மன்றாடி அதுபற்றி யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண் டதால், மருத்துவர் அவருக்கு வலி யைப் பொறுத்துக்கொள்ளக்கூடிய மருந்தை ஊசி வழி செலுத்தினார்.
அதனுடன் ஈரானிய வீரருடன் 'லைட் வெல்டர்வெயிட்' பிரிவில் கோதாவில் இறங்கிய கிருஷ்ணனின் இடது கை சில நிமிடங்களில் மரத்துப்போய் விட்டது.
ஈரானிய வீரரின் சரமாரியான குத்துகளை ஒரு கையில் கிருஷ்ணன் தடுத்துக்கொண்டிருந்ததைக் கவனித்த ஆப்பிரிக்க நடுவர், அது கிருஷ்ணனின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
ஆனால், கிருஷ்ணனோ எப்படியாயினும் போட்டியைத் தொடர வேண்டும் என்ற வேட்கையில் கோதாவைவிட்டு இறங்க மறுத்தார். ஒருவழியாக அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க அவர் போட்டியிலிருந்து விலகினார்.
அந்தக் காயம் மட்டும் ஏற்படவில்லை என்றால் அந்தப் போட்டியில் வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பு தமக்கு இருந்தது என்றும் ஆதங்கப்பட்டார் கிருஷ்ணன்.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தோக்கியோ சென்ற மற்றொரு குத்துச்சண்டை வீரரான ஜுமாட் இப்ராகிம், 'ஃபிலைவெயிட்' பிரிவில் கானாவின் போட்டியாளருடன் பொருதி தோல்வியடைந்தார்.