திரு குணாநிதி மாரிமுத்துவின் அப்பா சிங்கப்பூர் வந்து வேலை பார்த்தபோது, அவரின் தாத்தா தான் அவரைக் கையில் தூக்கிக் கொஞ்சி விளையாடியதாக அந்த 24 வயது இளையர் கூறினார். பள்ளிப் பாடங்கள் முதல் வாழ்க்கைப் பாடங்கள் வரை அப்பாவைவிட அதிகமாக தாத்தா தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால், 82 வயதில் திரு கோவிந்தராஜ் குப்புசாமி இறந்தபோது, அவரைச் சென்று பார்க்க முடியாத நிலைக்கு குணா ஆளானார்.
"முதலாளிகளிடம் ஆலோசனை கேட்டபோது இந்தியா சென்றுவிட்டால் சிங்கப்பூருக்குத் திரும்பி வருவது கடினம் என்றனர். இரண்டு லட்ச ரூபாய் கடனும் கட்ட வேண்டியுள்ளது. அதை அடைக்கவில்லை என்றால் சிங்கப்பூருக்கு வேலை பார்க்க வந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். சிங்கப்பூரிலேயே இருக்க முடிவெடுத்தேன்," என்றார் நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் நிலச் சீரமைப்புத் துறையில் வேலை பார்க்கும் குணா. அவர் தம் தாத்தாவை மட்டும் இழக்கவில்லை. ஐந்தாண்டுகளாக காதலித்த பெண், வேறு ஒருவரை இவ்வாண்டு தொடக்கத்தில் மணந்துகொண்டார்.
"சாதி காரணத்தால் அவரின் குடும்பத்தார் அவரை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். ஊருக்குத் திரும்ப முடிந்திருந்தால் நிச்சயமாகப் பேச்சு நடத்தி திருமணம் செய்திருக்கலாம்," என்றார் குணா.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக திரு குணாவைப்போல பல வெளிநாட்டு ஊழியர்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத காரணத்தால் பலவற்றை இழக்கும் சூழல் அவர்களுக்கு நேர்ந்துள்ளது. முன்பு ஓய்வு நாளில் தேக்காவிற்குப் போய் சாப்பிடுவது, கோயிலில் வழிபடுவது, நண்பர்களுடன் பேசிப் பழகுவது போன்ற நடவடிக்கைகள் மனதிற்கு மகிழ்ச்சி தந்தன. இப்போது அதுவும் இல்லை என்று வருத்தப்பட்டார் கட்டுமானத் துறை ஊழியர் திரு அழகர் வீரமுத்து, 34.
"ஊழியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அவ்வப்போது வெளியே சென்று வர அனுமதித்தால், எங்களின் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்," என்றார் அவர். தீபாவளி, பொங்கல், ஊர்த் திருவிழா போன்ற பண்டிகைக் காலங்களில் ஊர் திரும்புவது அல்லது தேக்காவிற்குப் போய் கொண்டாடுவது கட்டுமானத் துறை ஊழியர் 34 வயது திரு பிரம்மதேவன் செல்லையாவிற்கு வழக்கம்.
"வேலை, தங்குமிடம் இல்லாவிட்டால் பொழுதுபோக்கு மையத்திற்குப் போகலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஊழியர்களை வெளியே அனுப்ப முதலாளிகள் பயப்படுகிறார்கள். தேக்காவிற்குப் போகலாம் என்று அரசாங்கம் அனுமதித்தாலும் முதலாளிகள் தைரியமாக ஊழியர்களைச் சமூகத்திற்கு அனுப்புவார்களா என்பது சந்தேகம்தான்," என்றார் பிரம்மா.