விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு ஊழியர்களைச் சமூகத்தில் கலந்துறவாட அனுமதிக்கும் ஒரு முன்னோடித் திட்டம் வரும் வாரத்தில் தொடங்குகிறது.
தொடக்கமாக விடுதிகளைச் சேர்ந்த, முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 500 ஊழியர்கள் வரை சமூகத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்குச் சென்று வர, வாரம் ஆறு மணி நேரம் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் முந்தைய இரண்டு வார காலத்தில் கொவிட்-19 தொற்று இருந்திருக்கக்கூடாது. அத்துடன் விடுதிகளில் தங்கி இருக்கும் ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இந்த முன்னோடித் திட்டம் மூலம் ஊழியர்கள் செல்லக்கூடிய முதல் இடமாக லிட்டில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு முன்னதாக ஊழியர்கள் கொவிட்-19 விரைவுப் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். சென்று வந்த மூன்று நாட்களில் அந்தச் சோதனைக்கு உட்பட வேண்டும். ஒரு மாத காலம் இந்த முன்னோடித் திட்டத்தை மனிதவள அமைச்சு மதிப்பிட்டு வரும்.
இதனிடையே தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் தங்களுக்குரிய பொழுதுபோக்கு இடங்களுக்கு வாரம் இரண்டு முறை சென்று வரும் அனுமதியும் தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்ளும் புதிய கட்டாய சுயபரிசோதனைகளும் நாளை தொடங்கும்.
இதன் தொடர்பில் தம் கருத்துகளைக் கூறியிருந்தார், கடந்தாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வெளிநாட்டு ஊழியர் 27 வயது ம.அ. ரஞ்சித் குமார்.
"துவாஸ் டெக் பகுதியில் இருந்த ஒரு தங்குவிடுதியிலிருந்து ஜூரோங் பகுதி இருப்பிடத்திற்கு இடம் மாறினேன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முன்னர் என்னுடன் தங்குவிடுதியில் வசித்த சக நண்பர்களை லிட்டில் இந்தியாவில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்," என்று கட்டுமான ஊழியராக வேலை பார்க்கும் ரஞ்சித் குமார் கூறினார்.
"வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனைக் கருதி, சரியான பாதையை நோக்கியே இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சமூகத்தினருடன் இணையும் அக்குறுகிய நேரத்தில் சுதந்திரமாக தங்களது விருப்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார் TWC2 எனும் வெளிநாட்டு ஊழியர் நல அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருவாட்டி கிறிஸ்டின் பெலி.