வாசனைத் திரவிய எண்ணெய் வர்த்தகம் செய்து வரும் 29 வயது ஷோபனா சண்முகநாதன், 2018ஆம் ஆண்டில் இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்கள் பற்றியும் மூலிகைகள் பற்றியும் தெரிந்துகொள்ள கேரளாவிற்கு ஏழு மாதப் பயணம் மேற்கொண்டார்.
"பரிச்சயமில்லாத ஊருக்கு தனியாக உங்கள் மகளை எப்படி அனுப்புகிறீர்கள்?" என்று ஷோபனாவின் தாயாரிடம் பலர் அப்போது கேட்டனர்.
அதற்கு ஷோபனாவின் தாயார், "கூட்டைவிட்டு வெளியே சென்றால்தான் அவளால் கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்தாலும் ஏதேனும் தவறாக நடந்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்வாள்," என்று உறுதியோடு பதிலளித்ததாகப் பெருமையுடன் கூறினார் ஷோபனா.
ஷோபனாவின் வர்த்தகப்
பயணத்தில் இவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் பெரும்
பங்காற்றியுள்ளனர்.
தமது சகோதரருக்குப் புற்று நோய் ஏற்பட்ட பிறகு வழக்கமாகப் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம் ஆகியவற்றை புற்றுநோய் நோயாளிகள் பயன்
படுத்த முடியாது என்பதை ஷோபனா தெரிந்துகொண்டார். இது அவர் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆல்கஹோல் இல்லாத, தோலுக்குப் பாதுகாப்பான இயற்கையான வாசனைத் திரவியங்கள், தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் இவரது கவனம் திரும்பியது. மூலிகைகளுக்குப் பேர்போன கேரளாவிற்குச் சென்று அத்தியாவசிய எண்ணெய்கள் பற்றியும் மூலிகைகள் பற்றியும் கற்றுக்கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பினார் ஷோபனா.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'ஜிவவ்ரா' என்ற பெயரில் தனது வாசனைத் திரவிய எண்ணெய் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் வர்த்தகத்தைத் தொடங்கினார். முறைப்படி கற்றுக்கொண்டு, கேரளாவின் நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெற்று, இயற்கைப் பொருட்களைக் கொண்டு கேரளாவில் இவரது வாசனைத்
திரவியங்களைத் தயாரித்தார்.
வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கும் முறை, பொட்டல வடிவமைப்பு, முத்திரை,
சான்றிதழ், விற்பனை, விளம்பரம், நிறுவனத்தின் இணையப்பக்கம் ஆகிய அனைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் நடந்து வருகின்றன.
"இதுபோன்ற வாய்ப்புகள்
வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே கிடைக்கும். அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பு. தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்" என்று தமது தந்தை கூறிய வார்த்தைகள் இந்த வர்த்தகத்தில் தீவிரமாக இறங்க ஊக்கம் அளித்ததாக ஷோபனா தெரி வித்தார்.