நாளை தீபாவளி. புத்தாடை, வீட்டு அலங்காரங்களுடன் தீபாவளியில் முக்கிய இடம்பிடிப்பது விருந்து. கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்றுகூடி விருந்துண்ண முடியாததால் இந்த ஆண்டு சிறப்பாக விருந்து படைக்க, தீபாவளி கொண்டாடுபவர்கள் ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பார்கள். தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட நினைக்கும் அதே நேரத்தில், வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரயத்தைத் தவிர்ப்போம்.
ஆண்டுக்கு ஒருமுறை வரும் பண்டிகை என்பதால் வகை வகையான இனிப்புகள், மொறுமொறு முறுக்குவகைகள் போன்ற நொறுக்குத்தீனிகளுடன் மணக்கும் பிரியாணி, கோழி மசாலா, இறைச்சிக்கறி, இறால் சம்பால் என்று அறுசுவை உணவு வகைகளுடன் விருந்து படைக்க வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமும்.
விருந்துக்கு வருபவர்களும் பல வகை உணவையும் ருசிபார்க்கும் ஆர்வத்துடனேயே வருவார்கள். உணவு சுவையாக இருந்தாலும், பல வகையான உணவு இருக்கும்போது எல்லாவற்றிலும் சிறிதளவே சுவைப்பார்கள். அதிலும் பல வீடுகளுக்கு தீபாவளி கொண்டாடச் செல்பவர்கள் என்றால் அளவு இன்னும் குறைந்துவிடும்.
வயிறார விருந்து படைக்க வேண்டும் என்று அதிக உணவு வகைகளைத் தயார் செய்வதும், போதாமல் போய்விடக்கூடாது கூடுதலாகச் சமைப்பதும் அல்லது வாங்கி வைப்பதும் இயல்பானதே. ஆனால், அதிக அளவில் உணவு மீந்துவிடும்போது அதைக் குப்பையில் கொட்ட நேர்கிறது.
கொண்டாட்டம் இருந்தாலும் செலவைக் குறைக்கத் திட்டம்
பெரும்பாலும் தீபாவளியன்று உணவு அதிகமாக மீந்துவிட்டால், மறுநாள் வைத்திருப்பார் அல்லது தம் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் பிள்ளைகளின் நண்பர்களுக்கும் கொடுத்துவிடுவார் 52 வயது தமிழ் வாணி.
கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளிக்குக் கடையிலிருந்து உணவு தருவிக்கும் தமிழ் வாணி, சைவ, அசைவ உணவு வகைகளை வாங்க கிட்டத்தட்ட 200 வெள்ளி செலவு செய்வார். பணிபுரிவதால் சமைப்பதற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை எனக் கூறும் அவர், தீபாவளியன்று சமைத்து களைப்படைவதைவிட வீட்டுக்கு வருவோருக்கு விருந்து பரிமாறி, அவர்களுடன் உட்கார்ந்து பேசி ஓய்வாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கருதுகிறார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் இந்த ஆண்டு அதிகமானோர் வரும் சாத்தியம் இருந்தாலும், குறைந்த அளவு இறைச்சி, கோழி ஆகிய உணவு வகைகளை வாங்கி, உணவை விரயம் செய்வதைத் தவிர்க்க எண்ணியுள்ளார் தமிழ் வாணி. செலவுகள் கூடிவரும் நிலையில், குறைந்தது செலவில் 50 வெள்ளியை மிச்சப்படுத்த வேண்டும் என்பது அவரின் இலக்கு.
நண்பர்களுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருந்து
ஆண்டுதோறும் நண்பர்களுடன் இணைந்து நிதி திரட்டி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரியாணியும் பலகாரங்களும் அளித்து வருகிறார் 61 வயது லலிதா.
குறைந்த வருமான குடும்பங்களுக்கும் பலகாரங்களும் சமைப்பதற்குத் தேவையான பொருள்களும் வாங்கித் தருகிறார்.
“முன்பெல்லாம் நானும் என் நண்பர்களும் சமைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கும் கொடுப்போம். ஆனால், சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் உணவைத் தயார் செய்ய கூடுதல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், கடந்த ஆண்டிலிருந்து உணவை வாங்கிக் கொடுக்கத்தொடங்கிவிட்டோம்,” என்றார் லலிதா.
கிட்டத்தட்ட 60 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரியாணி, பலகாரங்களை நாளை அளிக்கவுள்ளார் லலிதா. ராஜாஸ் கேட்டரிங் நிறுவனத்திலிருந்து அவர் உணவை வாங்குகிறார்.
நேர விரயத்தையும் பொருள்விரயத்தையும் தவிர்க்க பலரும் வெளியிருந்து உணவு வாங்கப் போவதாகவே மேலும் பலரும் தெரிவித்தனர். ஆனால், விலை அதிகரித்து விட்டதால் குறைந்த அளவே வாங்கத் திட்டமிட்டுள்ளதாக சிலர் கூறினர். ஈராண்டுகளுக்குப் பிறகு வீட்டில் விருந்து வைப்பதால் செலவைப் பார்க்கவில்லை என வேறு சிலர் தெரிவித்தனர்.
விரயம் தவிர்க்க கடைசி நேர
பணிப்பை தவிர்க்கும் உணவகங்கள்
உணவகங்கள் ஏற்கெனவே முன்பதிவுகளை ஏற்றுக்கொண்டு விட்டதால், கடைசி நேரத்தில் பணிப்பு (ஆர்டர்) செய்யும்போது சிரமம் ஏற்படலாம். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னரே தீபாவளி உணவுபற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டதாக ‘செம்மிஸ் கேட்டரிங்’ நிறுவனம் தெரிவித்தது.
முன்கூட்டியே எவ்வளவு தேவைப் படும் எனத் தெரிந்தால், அதிகமாகச் சமைத்து வீணடிக்கவேண்டிய தில்லை என உணவகங்கள் கூறின. அதனால் பல உணவகங்கள் கடைசி நேர பணிப்பை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே வெளியில் உணவு வாங்க நினைப்பவர்கள் முன்னதாகவே திட்டமிடுவது நல்லது.
சராசரியாக ஒரு விருந்துச் சாப்பாட்டுக்கு $13 முதன் $15 வரை செலவாகும். குறிப்பிட்ட அளவு உணவு வாங்காதபோது, கூடுதலாக 50 வெள்ளி விநியோகத்திற்கே செலவாகலாம்.
உதாரணத்திற்கு, அஞ்சப்பர் உணவகம் நான்கு தீபாவளி உணவு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதில் ‘புதுகை விருந்து’ தலைக்கு $15. கோழி லாலிபாப், செட்டிநாட்டுக் கோழி மசாலா, சோறு, ரசம், மோர், உருளைக்கிழங்கு வறுவல், காலி பிளவர் மசாலா, அப்பளம், ஊறுகாய், பால் பாயசம் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றன. குறைந்தது 25 பேருக்காவது இவ்வுணவை வாங்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு சமைத்து உணவு விநியோகித்து வரும் செம்மிஸ் கேட்டரிங்கில் இந்த ஆண்டு ஒரு சாப்பாட்டின் விலையை $2 முதல் $3 வரை அதிகரித்துள்ளது. கடந்த ஈராண்டுகளில் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் பணவீக்கத்தால் மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தை ஈடுசெய்ய வேண்டும் என்பதாலும் இம்முடிவை எடுக்க நேரிட்டதாக செம்மிஸ் கேட்டரிங் நிறுவனத்தின் நிதி நிர்வாகியான சாய்சஜித்தா பழனிசாமி கூறினார்.
இம்முறை ஏறக்குறைய 2,000 பேர் தீபாவளிக்கு உணவுக்குச் சொல்லிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“எனது தாயார், சமையலில் பயன்படுத்தும் மூலப்பொருள்களையும் உணவு சமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகிறேன். ஒவ்வோர் உணவு விநியோகத்தின்போதும், குடும்பத்தில் இருக்கும் ஒருவராவது அனைத்து உணவு வகைகளையும் ருசித்த பின்னர்தான் அனுப்புவோம். எங்கள் அம்மாவின் கைமணத்துடன் எல்லா உண வகையும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் அவர்.
கிங்ஸ் உணவகத்தின் இயக்குநர் முகம்மது இக்பால், சமைப்பதற்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இம்முறை தீபாவளி விருந்து உணவின் விலையும் 25 விழுக்காடு கூடியுள்ளது என்றார்
எனினும், கொவிட்-19 கிருமித்தொற்று அலை குறைந்துள்ளதால் கடந்த 2021ஆம் ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாக, இந்த ஆண்டு தீபாவளி சாப்பாட்டுக்கு முன்பதிவுகள் வந்துள்ளதாகத் தெரி வித்தார் அஞ்சப்பர் உணவகத்தின் நிர்வாக பங்குதாரரான மாணிக்கம் குமரேசன்.
“விலை கூடினாலும் உணவு விலையை நாங்கள் கூட்டவில்லை. கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் இக்காலகட்டத்தில், அதிக மக்கள் உணவு வாங்கி எங்கள் வணிகத்திற்கு லாபத்தை தருவதால், விலைகளை ஏற்றாமலிருப்பதே எங்களுக்கு நல்ல முடிவாக தெரிகின்றது,” என்றார் அவர்.
செலவும் உழைப்பும் அதிகம்
என்றாலும் வீட்டு சமையலே சிறப்பு
இல்லத்தரசியான 54 வயது உ. சரஸ்வதிக்கு வீட்டில் தம் கையால் சமைத்து விருந்தளிப்பதே மனநிறைவைத் தருகிறது. 16-17 பேருக்கு சமைப்பதற்கு, 600 வெள்ளி செலவு ஆகிறது என்றாலும் சுவையான, தரமான விருந்தைப் படைக்கமுடிவதாகக் குறிப்பிட்ட அவர், வீட்டுக்கு வருபவர்கள் சுவைத்துச் சாப்பிடுவது மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னார்.
கடையில் வாங்கினாலும் வீட்டில் சமைத்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் விரயம் இல்லாமல் விருந்து படைத்து மகிழலாம்.