காலம் மாறினாலும் தான் மாறவில்லை என்கிறார், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ‘கப்பூர்’ கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜோதி என்ற 52 வயது குடும்பமாது.
இப்போதெல்லாம் எரிவாயுவைச் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவர் இன்னமும் பெரும்பாலான நாள்களில் வறட்டி, விறகைப் பயன்படுத்தி வீட்டில் சமைப்பதாகக் கூறுகிறார்.
“இரண்டு வறட்டி, ஒரு விறகு இருந்தால் போதும் ஐந்து பேருக்கு சாதம், குழம்பு, கூட்டு உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக சமைத்துவிடலாம்,” என்கிறார் திருமதி ஜோதி.
இவர்கள் வீட்டில் இரண்டு பசு மாடுகள் இருக்கின்றன.
“ஒரு மாடு ஒரு நாள் போடும் சாணத்தைக்கொண்டு ஐந்து, ஆறு வறட்டிகளைத் தட்டிவிடலாம். அரை மணி நேரம் செலவிட்டால் போதும். 15 வறட்டிகள் உருவாகிவிடும்,” என்று தன்னுடைய வீட்டின் கொல்லைப் புறத்தில் வறட்டி தட்டிக்கொண்டு இருந்த அந்த மாது குறிப்பிட்டார்.
திருவாட்டி ஜோதியின் கணவர் ஒரு விவசாயி. இத்தம்பதிக்கு மணமான இரு புதல்வர்கள் இருக்கிறார்கள்.
“முன்பு எங்கள் வீட்டில் நான்கு, ஐந்து மாடுகள் இருந்தன. நிறைய சாணம் சேரும்.
“நானே வறட்டிகளைத் தட்டி தேவையானவற்றை வைத்துக்கொண்டு மிச்சத்தை விற்றுவிடுவேன்.
“இப்போது ஒரு வறட்டி ரூ. 10க்குக்கூட விலை போகிறது.
“ஆனாலும் கிராமப் புறங்களில் மாடு வைத்திருப்போரில் பெரும்பாலானவர்கள் வறட்டி தட்டுவதில்லை. ஒரு வறட்டி காய மூன்று நாள் ஆகும்.
“மழைக்காலம் என்றால் 10 நாள்கூட பிடிக்கும். சாணத்தை வைக்கோல் கூளங்களில் சேர்த்து இரண்டும் முற்றிலும் சேருமாறு காலால் முதலில் மிதித்துக் கொள்ள வேண்டும்.
“பிறகு கைகளால் தட்டி காயவைத்துவிட வேண்டும். நல்ல வெயிலில் காயும் வறட்டிகளை அடுத்த நாள் புரட்டிப் போட்டு காயவைக்க வேண்டும்.
“முன்பெல்லாம் வீட்டுச் சுவர்களில் வறட்டியைத் தட்டி காயவைப்பார்கள். இப்போது கான்கிரீட் சுவரில் அதனைச் செய்ய இயலவில்லை,” என்று அந்த மாது குறிப்பிட்டார்.
வறட்டிக்கு அதிகத் தேவை நிலவுகிறது. விபூதி தயாரிப்பிலும் குத்துவிளக்கின் நடுவில் இருக்கும் ஒரு வகை மண் கலந்த பொருளைச் சுட்டு உருவாக்குவதிலும் பயன்படுத்தப்படுகிறது.
செங்கல் கால்வாய், உடல் தகனம் ஆகியவற்றுக்கு வறட்டி முக்கியமான ஒன்று.
“வறட்டி நின்று நெடுநேரம் எரியக்கூடியது. புகை அவ்வளவாக வராது,” என்றார் அவர்.
வறட்டி அதிக வெப்பத்தை கக்கக்கூடியது. அதிக சூட்டைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடியது.
ஒரு மணி நேரம் வறட்டி தட்டினால் உடம்பு மிகவும் சூடாகிவிடும். ஆகையால், வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் நீராடுவது அவசியமான ஒன்று.
ஒரு மண்டலம் அதாவது 48 நாள்கள் அன்றாடம் நான்கு வேப்பிலையைச் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த அளவுக்கு சூடு உண்டாகுமோ அந்த அளவுக்கு வறட்டி தட்டும்போது உடல் வெப்பம் கூடும் என்று கூறப்படுவது உண்டு.
“முன்பெல்லாம் அதிக நேரம் வறட்டி தட்டுவேன். இப்போது உடல்நிலை காரணமாக இதைக் குறைத்துக்கொண்டேன்.
“வீட்டில் சமையலுக்கு வறட்டி, விறகைப் பயன்படுத்துவது உடல்நலனுக்கு மிகவும் ஏற்றது. சுற்றுச் சூழலுக்கும் மிகவும் உகந்தது,” என்று கூறும் இந்த மாது, வறட்டி, விறகை சமையலுக்குச் சார்ந்திருப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உதவுவதாகக் கருதுகிறார்.
“பொதுவாக வறட்டி 1.25 அடி விட்டம் அளவுள்ள வட்ட வடிவில் இருக்கும். வறட்டியைத் தட்டி அதை விற்றே குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில்லறை செலவுகளை எல்லாம் சமாளித்துவிடலாம்.
“வறட்டி பல நேரங்களில் எனக்குக் கைகொடுத்து இருக்கிறது. வறட்டியை விற்று பொருள் ஈட்டி அதிலிருந்து கைப்பேசிகூட வாங்கி இருக்கிறேன்,” என்று திருமதி ஜோதி கூறினார்.
“மாட்டுச் சாணத்தில் இருந்து திருநீறும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதை நாங்கள் செய்வதில்லை.
“வைக்கோல் கூளம் கலக்காமல் சாணத்தைச் சுத்தம் செய்து அதை முட்டம் போட்டு திருநீறு தயாரிக்க வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
இப்போது அமேசான் போன்ற இணையத் தளங்களிலும் வறட்டி விற்பனை செய்யப்படுகிறது. வியாபார நோக்கத்துடன் வறட்டி தொழில் விரிவடைந்து வருகிறது.
“பொதுவாக வறட்டி தட்டுவது நல்ல உடற்பயிற்சி. வறட்டியைத் தட்டும்போது சாணத்தில் இருந்து ஏற்படக்கூடிய ஒரு வகை வாயுவை சுவாசிப்பதால் பல நோய்களை எதிர்க்கக்கூடிய ஆற்றல் நம் உடலில் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
“கால்கள் இரண்டும் சாணத்தை மிதித்துத் தர, கைகள் இரண்டும் சாணத்தை வறட்டியாகத் தட்டிபோட, காசு கைக்கு வரும்.
“பசு மாட்டை வளர்ப்பவர்கள் பசும்பால் மட்டுமின்றி சாணத்தையும் சார்ந்து இருக்கலாம். சுயசார்புடன் வாழ்க்கையை ஓட்டலாம்,” என தன்னம்பிக்கையுடன் கூறினார் திருமதி ஜோதி.