கிறைஸ்ட்சர்ச்சில் இலங்கையுடன் மோதிய டெஸ்ட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா தகுதிபெற்றது.
ஆட்டத்தைத் தோற்றதால் இலங்கையின் இறுதி ஆட்டக் கனவு தகர்ந்தது.
கடைசி நாளின் பாதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் கடைசி பந்துவரை போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து, இலங்கை அணியை முதலில் பந்தடிக்கப் பணித்தது.
முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்கள் குவித்தது இலங்கை. பதிலுக்கு நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 373 ஓட்டங்கள் எடுத்தது.
ஏஞ்சலோ மேத்யூஸின் சதத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 302 ஓட்டங்கள் எடுத்தது.
286 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்திய நியூசிலாந்திற்கு டேரியல் மிட்சல், வில்லியம்சன் தூணாக நின்று வெற்றிபெறச் செய்தனர்.
இரண்டு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 1-0 என்று நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.