ஜோகனஸ்பர்க்: கிரிக்கெட் விளையாட்டில் எதிரணி ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியைக் கொண்டாடியபோது, பந்துவீச்சாளர் ஒருவர் காயமடைந்தது அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவ்வணி வீரர் கைல் மேயர்சை ‘எல்டபிள்யூ’ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ்.
மேயர்ஸ் ஆட்டமிழக்கவில்லை என என்று கள நடுவர் முதலில் அறிவித்தார். அம்முடிவை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணி ‘டிஆர்எஸ்’ முடிவு மறுஆய்வு முறையை நாடியது. அதில், மேயர்ஸ் ஆட்டமிழந்தது தெளிவாகத் தெரிந்தது.
அம்மகிழ்ச்சியைக் கொண்டாட விரைந்த மகராஜ், கால் சுளுக்கி கீழே விழுந்தார். அவரால் எழுந்து நிற்க முடியாததை அடுத்து, தூக்குப் படுக்கை மூலம் திடலிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் மகராஜ் ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது இடது காலில் தசைநாண் முழுமையாகக் கிழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு அவரால் விளையாட முடியாது என்றும் இவ்வாண்டு அக்டோபரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது டெஸ்ட்டில் 284 ஓட்டங்களில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.