பெசெட்டேரே: இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீசுக்கும் இடையே நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடி ஆட்டமிழந்தார். முதலில் பந்தடித்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்தது. முதல் நாள் பயிற்சி ஆட்ட முடிவில் அமித் மிஸ்ரா 18 ஓட்டங்களுடனும் ரோகித் சர்மா 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந் தனர். தொடக்க வீரர்களான ஷிகார் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் 27 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 93 ஓட்டங்களைச் சேர்த்தனர். தவான் 7 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து 'ரிட்டையர்ட் அவுட்' முறையில் வெளியேறினார். ராகுலும் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்கள் எடுத்து 'ரிட்டையர்ட் அவுட்' முறையில் வெளியேறினார்.
விராத் கோஹ்லி மந்தமான முறையில் பந்தடிப்பைத் தொடங்கினார். 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அவர் 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஜோமெல் வாரிகன் பந்தில் விக்கெட்காப்பாளர் டவ்ரிச்சிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். ரகானே 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புஜாராவும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அவர் 102 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்து 'ரிட்டையர்ட் அவுட்' முறையில் வெளியேறினார். ரோகித் சர்மா, விரித்திமான் சாஹா 6வது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்கள் சேர்த்தனர். 22 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சாஹா ஆட்டமிழந்தார். செயிண்ட் கிட்ஸ் மைதானம் பந்துவீச்சுக்கு உகந்தது என்று தெரிவித்த வெஸ்ட் இண்டீசின் வாரிகன், இதைத் தமக்குச் சாதக மாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாகக் கூறினார்.
பயிற்சி ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகப் பந்தடிக்கும் இந்தியாவின் ரோகித் சர்மா. படம்: ஏஎஃப்பி