துபாய்: துபாயில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் பூப்பந்துப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் அகானே யமாகுச்சி யைத் தோற்கடித்துள்ளார். உலகின் ஆகச் சிறந்த 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப் போட்டிக்குத் தரவரிசையில் பின்தங்கிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக தகுதி பெறவில்லை. அதே சமயம் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மற்றோர் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முதல்முறையாக தகுதி பெற்றார். இந்திய தரப்பில் சிந்து மட்டுமே இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். போட்டியின் 'பி' பிரிவில் இடம்பெறும் பி.வி. சிந்து தனது முதல் ஆட்டத்தில் முதல் செட்டைப் பறிகொடுத்தார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட சிந்து ஆட்டத்தைக் கைப்பற்றினார். 12-21, 21-8, 21-15 என்ற செட் கணக்கில் அவர் வெற்றி பெற்றார். சிந்து தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவின் சன் யுவை எதிர்கொள்கிறார்.
வெற்றிக் களிப்பில் சிந்து (இடது). படம்: ஏஎஃப்பி