சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசனை தலைமைப் பயிற்றுநராக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவரும் பந்தடிப்பாளருமான சல்மான் பட்டை சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் நியமித்து உள்ளது. இந்த ஆண்டின் கிரிக்கெட் போட்டி பருவத்திற்கு இவர் பணியாற்றுவார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார் சல்மான் பட், 37 (படம்). ஜூலை மாதம் நடைபெற இருக்கும் அனைத்துலகப் போட்டிகளுக்கு சிங்கப்பூர் அணியைத் தயார்ப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட உள்ளார். இதற்கு அவருக்கு மிகக் குறுகிய காலமே உள்ளது. ஸிம்பாப்வேயில் டி20 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பின்னர் ஆகஸ்ட்டில் ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டங்கள் இலங்கையிலும் ஐசிசி ஆண்கள் சவால் லீக் ஏ பிரிவுப் போட்டிகள் கனடாவிலும் நடைபெறுகின்றன.
குறுகியகால இடைவெளியில் சிங்கப்பூர் அணியின் திறன்களை சல்மான் பட் வெளிக்கொணருவார் என்ற நம்பிக்கை உள்ளதாக சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைமை நிர்வாகி சாத் கான் சனுஜா கூறினார்.