தோஹா: ஆசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியுள்ளது தஜிகிஸ்தான்.
இப்போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் தஜிகிஸ்தான், ‘ஏ’ பிரிவில் லெபனானை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதே பிரிவில் உள்ள சீனா போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது.
கத்தாரிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சீனாவுக்கு இந்நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். எல்லா பிரிவுகளிலும் மூன்றாவதாக வரும் அணிகளில் ஆகச் சிறந்தவை காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதிபெறும்.
அந்த வகையில் ‘ஏ’ பிரிவில் இரண்டு புள்ளிகளை மட்டும் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது சீனா.
நடப்பு வெற்றியாளரும் இவ்வாண்டு ஆசிய கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் அணியுமான கத்தார், இப்பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அது, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏற்கெனவே உறுதியானது.
தஜிகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது.
லெபனானுக்கு எதிரான ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் பாசல் ஜிராடி, லெபனானை முன்னுக்கு அனுப்பினார். பின்னர் 56வது நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக அந்த அணியின் காசம் எல் ஸெயின் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் தஜிகிஸ்தானின் பர்விட்ஷோன் உமார்பொவேவ் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். 90 நிமிடங்கள் தாண்டிய பிறகு நுரிதின் காம்ரொகுலொவ் தஜிகிஸ்தானின் வெற்றி கோலைப் போட்டார்.