மரத்தண்டுப் பகுதி லாரியில் ஏற்றப்பட்டபோது அது நகர்ந்து பங்ளாதேஷ் ஊழியர் ஒருவரை இடித்ததில் அவர் விழுந்து தலையில் அடிபட்டது. உயிரிழந்த அந்த 28 வயது ஊழியரைச் சேர்த்து இதுவரை சிங்கப்பூரில் 43 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதற்குமுன் 2017ஆம் ஆண்டில் பதிவான 42 வேலையிட மரணங்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்து வந்த நிலையில் இவ்வாண்டின் எண்ணிக்கை அதை மிஞ்சிவிட்டது. 2021ஆம் ஆண்டில் 37 வேலையிட மரணங்களும், 2020ல் 30 மரணங்களும், 2019ல் 39 மரணங்களும் நிகழ்ந்திருந்தன.
உயிரிழந்த பங்ளாதேஷ் ஊழியர், 1003 தோ பாயோ தொழில்துறை பேட்டை அருகே தோ பாயோ ஈஸ்ட் ரோட்டில் நேர்ந்த இந்த உயிர்க்கொல்லி விபத்தில் சிக்கியதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஊழியர் ‘பென்டா லேன்ட்ஸ்கேப்’ நிறுவனத்தால் நியமிக்கப்பட்டவர் என்றும் மரம் வெட்டும் பணிகளுக்குப் பிறகு அங்குள்ள மரத்தண்டுகளை வண்டியில் ஏற்றுவதில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் அறியப்படுகிறது.
லாரியில் உள்ள பாரந்தூக்கிக் கருவியைப் பயன்படுத்தி மரத்தண்டுகள் தூக்கப்பட்டன. அப்போது ஒரு மரத்துண்டு கயிற்றிலிருந்து விழுந்து ஊழியரை இடித்ததாக அமைச்சு குறிப்பிட்டது. டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த ஊழியர் பின்னர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ‘பென்டா லேட்ன்ஸ்கேப்’ மரம் வெட்டும் மற்றும் வண்டியில் ஏற்றும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவும் இட்டுள்ளது. வேலையிட மரணங்களில் அண்மைய காலமாக இருந்து வரும் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, மனிதவள அமைச்சு மேலும் கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்தியதை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் ஓர் ஊழியர் உயிரிழந்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் பாதுகாப்புக் கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது கண்டுபிடிக்கப்படும் விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இருமடங்காகியது. மேலும், கடுமையான அல்லது உயிரைப் பறித்த வேலையிட சம்பவத்திற்குப் பிறகு, நிறுவனத்திடம் கடுமையான விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று மாதம் வரை புதிய வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனம் நியமிக்கத் தடை விதிக்கப்படும். இது செப்டம்பர் 1 முதல் அடுத்த பிப்ரவரி 28 வரை பாதுகாப்பை உச்சநிலையில் வைத்திட அமல்படுத்தப்பட்டது.