தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவல் அதிகரித்துள்ள வேளையில், கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொண்டவர்கள், பரிசோதனை முடிவுகள் தெரியும் முன்பே பல்வேறு இடங்களுக்குச் செல்வதும் கிருமிப் பரவல் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் நேற்று (ஜூன் 22) மாலை காடாம்புலியூர் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வடலூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வெளியூரிலிருந்து வந்த இவர்களுக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பரிசோதனை முடிவுகள் பெறப்படவில்லை.
இந்நிலையில் நேற்று பேருந்தில் சென்றுகொண்டிருந்த இந்தத் தம்பதியை தொடர்புகொண்ட சுகாதாரத் துறையினர், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்ததுடன், உடனே அரசு மருத்துவமனைக்கு வருமாறு கோரினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதனை பேருந்து நடத்துநரிடம் தெரிவித்தனர். உடனே, ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.
தம்பதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினர். அந்த வழியாக வந்த பிற பேருந்துகளில் ஏறி மற்ற பயணிகள் அங்கிருந்து சென்றனர்.
சுகாதாரத் துறையினர் அவசர சிகிச்சை வாகனத்தில் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.
அந்தப் பேருந்தை வடலூர் அரசு பணிமனைக்கு கொண்டு சென்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online