பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நடராஜன் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை ஆவார் என்று வெளியான தகவலை கர்நாடகா சிறைத்துறை மறுத்துள்ள நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரியவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதைச் செலுத்தவில்லை எனில் அவர் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருக்கும். இதுவரை அவர் அந்த அபராதத் தொகையைச் செலுத்தவில்லை.
சிறை நன்னடத்தை விதிகள் மூலம் கைதிகளுக்குத் தண்டனைக்காலம் சில மாதங்கள் குறைக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால் சசிகலா பொருளாதாரக் குற்றம் இழைத்ததன் அடிப்படையில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். அத்தகைய குற்றங்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது எனக் கூறப்படுகிறது. எனினும் சிறைக் கண்காணிப்பாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதிகளுக்கு அதிகபட்சமாக இரு மாதத் தண்டனைக்காலத்தைக் குறைக்கமுடியும்.
இதுபோன்ற சலுகைகள் கிடைக்குமானால் சசிகலா சில மாதங்கள் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு சொல்கிறது.