கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அனைத்துலக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 750 மீனவர்கள், உணவு, தங்குமிடம் இல்லாமல் தமிழகம் திரும்ப முடியாமல் அங்கு தவித்து வந்தனர்.
அவர்களை மீட்க கப்பல் ஒன்றை இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக, ஒவ்வொரு மீனவரும் பயணக்கட்டணம் உட்பட ரூ.10,000 செலவை ஏற்க வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், “கப்பலில் இடமில்லை,” என்ற காரணத்தைக் கூறி 44 தமிழக மீனவர்களை அங்கேயே விட்டுவிட்டு கப்பல் ஈரானிலிருந்து புறப்பட்டுவிட்டது.
கப்பலில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வெளியேற்ற முத்திரை பெற்ற பிறகு தமிழகம் திரும்ப இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட 44 மீனவர்கள் அரசுரீதியான உதவிகளை, ஈரான் அரசிடம் பெற இயலவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த 44 பேரையும் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மீனவர்களிடம் அதற்கான கட்டணத்தைக் கோரக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், அதுவரை ஈரானில் அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.