சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து மாதங்களாக பெரும் அவதிப்பட்டு வந்த தமிழக மக்களின் 90% இயல்பு வாழ்க்கை, முதல்வர் பழனிசாமியின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பால் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பத் தொடங்கி உள்ளது.
“பேருந்து சேவைகள் இன்று முதல் இயங்கும். ‘இ-பாஸ்’ அனுமதி முறை ரத்து செய்யப்பட்டு, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்,” என்று முதல்வர் அறிவித்துள்ளதால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்று மக்கள் மத்தியில் பரவாமல் முறி யடிக்க மாநிலம் எங்கும் பொது முடக்கம் அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
முக்கிய தளர்வுகள்:
“சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள்ளான அரசு, தனியார் பேருந்து சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயங்க உள்ளன.
“கடந்த இரு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த உத்தரவும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
“இதேபோல, சினிமா படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 75 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் பங்கேற்கக் கூடாது, பார்வையாளர்களுக்கும் அனுமதி இல்லை போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
“அனைத்து வகை உணவகங்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
“வங்கிகளும் அதனை சார்ந்த நிறுவனங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, அரசு அலுவலகங்களும் இன்று முதல் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்,” என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு வருவதற்கு மட்டும் கட்டாயம் ‘இ-பாஸ்’ தேவை என இம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
முக்கிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ள தமிழக அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
“மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு தொடரும். இதனால், பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது.
“பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் அவசியம்.
“இதேபோல, திரையரங்குகள், நீச்சல் குளங்கள் கடற்கரை, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களைத் திறப்பதற்கும் தடை நீடிக்கிறது.
“மத, சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார விழாக்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.