வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அண்மையில் திருமணமான பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட தனது கணவனை மீட்டுத் தரும்வரை தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அவரது உறவினர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம், பஞ்சநதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமதியும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் வேலை செய்து வந்த செல்வகுமார் கடந்த 16ஆம் தேதி கிராமத்துக்கு திரும்ப, 17ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இதற்கு செல்வகுமாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் இருவருக்கும் 18ஆம் தேதி வேதாரண்யத்தில் வைத்து பதிவுத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்ததாகவும், அதன்படி பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்காக வந்த செல்வகுமாரை அவருடைய உறவினர்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சுமதி, வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
காவல்துறையினர் செல்வகுமாரை மீட்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிடும் படி பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனது கணவரை மீட்டுத் தரக்கோரி உறவினர் களுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் பெண்.