தமிழக அரசின் சுகாதாரத் துறை, கொரோனா கிருமிப் பரவலின் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) அறிக்கையாக வெளியிட்டது. மாநிலம் முழுவதும் அன்றைய தினம் 1,114 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 6,891ஆக உயர்ந்தது.
குறிப்பாக, சென்னை (325 பேர்), செங்கல்பட்டு (81 பேர்), திருவள்ளூர் (57 பேர்), திருப்பூர் (52 பேர்) ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கிருமி தொற்றியது.
மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து 1,198 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 7 லட்சத்து 85,315 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் ஞாயிற்றுக்கிழமை 15 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,983 ஆகியுள்ளது.