சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்களிடம் நேற்று முன்தினம் நேர்காணலைத் தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இம்மாதம் 6ஆம் தேதி வரை விருப்ப மனு அளித்த வேட்பாளர்களிடம் அவர் நேர்காணல் நடத்துவார். அதன்படி நேற்று முன்தினம் முதல் நேர்காணல் தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மாதம் 6ஆம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. இம்மாதம் 12ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகின்றது.
தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன.
இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் மமக, முஸ்லிம் லீக் கட்சிக்கு மொத்தம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மதிமுக, விசிகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரசுடனும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகள், சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இந்நிலையில் திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் செல்வாக்கு, செலவழிக்கும் தகுதி, மாவட்ட வாரியாக கட்சியின் வெற்றி வாய்ப்பு, கூட்டணிக் கட்சிகள் நிலவரம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இதில் அலசப்படும்.