சென்னை: முதல்வர் நாற்காலியில் அமரவிருக்கும் மு.க. ஸ்டாலின், திமுகவில் வட்ட பொறுப்பாளராக களப்பணியாற்றி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்து கட்சியின் தலைவராக உச்சம் தொட்டவர். பதின்ம வயதின் தொடக்கத்தில் அரசியல் களப்பணி கண்ட இவர், கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டவர்.
2018ஆம் ஆண்டு கருணநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மறு ஆண்டே, 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்கீழ், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கி, அதற்குத் தலைமையேற்றார் இவர். தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இன்றி நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் 38ல் வாகை சூடியது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 21ல் 12 இடங்களுடன் 52 விழுக்காட்டு வாக்குவங்கியையும் அக்கட்சி பெற்றது.
திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் பெற்ற முதல் வெற்றியாக அது பதிவானது.
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். ‘ஸ்டாலின் தான் வராரு… விடியல் தரப்போறாரு…’ என்ற முழக்கத்துடன் அவர் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண் டார்.
2011, 2016ஐ தொடர்ந்து தற்போதும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற்று முதலமைச்சரின் தொகுதி என்ற தகுதியை அத்தொகுதி மக்களுக்கு வழங்கியுள்ளார். அத்துடன், திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் அரியணையைப் பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடிக்கி றது. ஜெயலலிதா, கருணா நிதிக்குப் பிறகு மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்.