லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தாம் ஏதோ குற்றச்செயலில் ஈடுபடுவதுபோல் போலிசார் தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
போலிசாரிடம் அவர் மிகுந்த ஆவேசத்துடன் வாதிடும் காட்சி அடங்கிய காணொளிப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. ஒரு பெண்ணைக் கைது செய்ய உரிய உத்தரவு தேவை இல்லையா? என்று பிரியங்கா கேள்வி எழுப்பினார்.
"இது விவசாயிகளின் பூமி. பாஜகவின் பூமி அல்ல. என்னைக் கைது செய்வதற்கான உத்தரவு இருக்கிறதா? இல்லையெனில் போலிசார் மீது கடத்தல் புகார் அளிப்பேன்," என்றார் பிரியங்கா.
இதையடுத்து, அவர் விடுதி ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டார். அப்போது தாம் அடைக்கப்பட்டிருந்த அறையை துடைப்பம் கொண்டு அவர் சுத்தப்படுத்தினார். இது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரியங்காவின் துணிச்சல் காவல்துறையினரை மிரள வைத்ததாக ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"பிரியங்கா, நீங்கள் பின்வாங்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய தைரியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். நீதிக்காக நடக்கும் இந்த வன்முறையற்ற போராட்டத்தில் நாட்டுக்கே உணவு வழங்குவோர்க்கு வெற்றி கிடைக்க வேண்டும்," என்று ராகுல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, பிரியங்காவின் துணிச்சலை காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு, காங்கிரசார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் ஜனதா தலைமையிலான மத்திய அரசு இந்திரா காந்தியைக் கைது செய்ததை, பிரியங்காவின் கைது சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளார் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர்.
"கடந்த 1997, அக்டோபர் 3ஆம் தேதி ஜனதா அரசு இந்திரா காந்தியைக் கைது செய்தது தவறு என நிரூபணமானது. அதேபோல் 2021 அக்டோபரில் பிரியங்கா கைது செய்யப்பட்டதன் மூலம் பாஜக ஆட்சியின் முடிவு தொடங்கிவிட்டது," என்று சுனில் ஜாக்கர் கூறியுள்ளார்.