சிங்கப்பூர், அமெரிக்கா சீனா, உள்ளிட்ட தமிழர்கள் வசித்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைப் போதிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழை இரண்டாம், மூன்றாம் மொழியாக கற்பிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
இந்தத் திட்டத்தையொட்டி தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம், பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் திறன் அறிதல் முதலானவை குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் விவரங்களையும் சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு அனுப்பிவைக்கும்படி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், தாளாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
பள்ளி கல்வித்துறை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மூலம் அவர்களுக்குச் சுற்றறிக்ைக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக கல்வித்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறின.
வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்மொழியைக் கற்க இதன் மூலம் நல்ல வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு அமைத்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் 2000ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் இணையத்தளம் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்று முன்பு இந்தக் கழகம் குறிப்பிடப்பட்டது.
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு முதலானவற்றை இணையம் வழியாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ்மொழி ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஆதாரங்களுடன் போதிப்பது இந்தக் கழகத்தின் நோக்கமாகும்.
இந்தக் கழகம் அரிச்சுவடி முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் திட்டங்களைப் பல்வேறு கோணத்தில் வகுத்து வழங்கி வருகிறது.
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தி அவற்றைப் பாதுகாக்கும் பணியையும் கழகம் செய்து வருகிறது.
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் தொடர்பான அரிய பொருட்களையும் ஆவணங்களையும் மின்னிலக்க வளங்களாக மாற்றி இணையத்தில் இது பதிவேற்றி இருக்கிறது.
அவற்றை உலகெங்கும் இருக்கக்கூடிய ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கணினித் தமிழ் ஆய்வை ஊக்குவிக்க தேவைப்படும் தமிழ் மென்பொருட்களையும் கழகம் அப்போதைக்கு அப்போது உருவாக்கி வருகிறது.
தமிழ் மென்பொருட்களைப் பொறுத்தவரை இக்கழகம்தான் தமிழக அரசின் முகவராகும்.