சென்னை: வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கிடையே இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்," என்று கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறைகூவல் விடுத்துள்ளார்.
"மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.
"தேர்தலுக்காகவும் கூட்டணிக்காகவும் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தேர்தலுக்கு முன்பே நான் சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும் 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இட ஒதுக்கீடு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும்," என்று அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசை வன்னியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
இந்த நிலையில் வன்னியர் களுக்கான உள் இடஒதுக்கீட்டை மீட்காமல் ஓய மாட்டேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சூளுரைத்துள்ளார்.
"சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எண்ணி நீங்கள் கலங்க வேண்டாம். உங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்க வேண்டியது என் கடமை. அதை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வன்னியர் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்போம். கவலை வேண்டாம். இதுவும்கடந்து போகும்; நீதி வெல்லும்," என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராமதாஸ் குறிப் பிட்டுள்ளார்.