போரூர்: தமிழகத்தில் தக்காளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில் முருங்கைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் அதி கரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் தினசரி 450 லாரிகள் நிறைய காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்துதான் 75 விழுக்காடு காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன.
ஆனால் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிச் செடிகள், தோட்டங்கள் பெரும்பாலும் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்தது.
உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. தினசரி 70 லாரிகள் வரை வந்துகொண்டிருந்த தக்காளி தற்போது 40 லாரி களாக குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது.
நேற்று 200 லாரிகள் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக அங்கிருந்து வரும் தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்து விலை அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாகவே கோயம்பேட்டில் உள்ள சில்லறைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையில் மற்றும் காய்கறி சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 150ஐக் கடந்துள்ளது.
இதற்கிடையே தக்காளியைத் தொடர்ந்து பச்சைக் காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பன்னீர் பாகற்காய் உள்ளிட்ட காய்கறி களின் விலையும் கிலோ ரூ. 100ஐத் தாண்டி விற்ககப்படுகிறது என தமிழக ஊடகமான மாலை மலர் தெரிவித்தது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120, பீன்ஸ் ரூ100, அவரைக்காய் ரூ. 110, வெண்டைக்காய் ரூ. 100, முருங்கைக்காய் ரூ. 150, முட்டை கோஸ் ரூ. 50 என விற்கப்பட்டது.