தம்மம்பட்டி: கெங்கவல்லியில் பாலம் கட்டித் தரும்படி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் அனைவரும் சொந்தமாக நிதி திரட்டி ரூ.2 லட்சம் செலவில் தற்காலிகப் பாலத்தை அமைத்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே சுவேத நதிக்கரையோரம் சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்த சுவேத நதியைக் கடந்துதான் கெங்கவல்லி பகுதிக்குச் செல்லவேண்டும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் மக்கள் 5 கி.மீ. தூரம் சுற்றித்தான் செல்லவேண்டும்.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தலா ரூ.1,000 வீதம் பணம் சேகரித்து ரூ.2 லட்சம் செலவில் சிமெண்ட் குழாய்களை வாங்கி, அவற்றை ஆற்றின் குறுக்கே பதித்து, அதன் மேல் மண்கொட்டி தற்காலிகப் பாலத்தை அமைத்துள்ளனர்.
இனியாவது, அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று இங்கு நிரந்தர பாலத்தை கட்டித்தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.