கோவை: ஆப்பிரிக்க பெண்ணைக் காதலித்து மணந்துள்ளார் கோவையைச் சேர்ந்த இளையர் முத்து மாரியப்பன். இவர்களது திருமண நிகழ்வில் பங்கேற்ற மணமகளின் உறவினர்கள் தமிழகப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்திருந்தனர்.
பொறியியல் படிப்பை முடித்துள்ள முத்துமாரியப்பன் கேமரூன் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் அந்நாட்டைச் சேர்ந்த வால்மி இனாங்கோ என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
முத்து மாரியப்பன் இந்து எனில், வால்மி கிறிஸ்தவர். எனினும் காதலர்கள் இருவரும் தத்தம் பெற்றோரிடம் விவரம் தெரிவித்து, அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். திருமணத்தை கோவையில் நடத்துவது என முடிவானது.
அதன்படி பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் கோவை வந்து சேர்ந்தனர். நேற்று முன்தினம் நாதஸ்வர இசையோடு நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு மணமகள் பல்லக்கில் வைத்து திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். பிறகு இந்து முறைப்படி தாலி கட்டி காதலியை மணந்தார் மணமகன் முத்து மாரியப்பன். இந்நிகழவில் மணமகள் வால்மியின் பெற்றோரும் உறவினர்களும் வேட்டி, சேலை அணிந்திருந்தனர்.