சென்னை: தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக விலை உயர்ந்து நேற்று முன்தினம் 100 ரூபாயைக் கடந்தது. அதனால் குறைவான விலையில் தக்காளி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
கூட்டுறவுத் துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் சந்தைவிலையை விடக் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்துக் குறைந்து, ஒரு கிலோ 120 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்பனையாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விலையைக் கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் வரை குறைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பெரியசாமி.