சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரம்
சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.946 கோடி செலவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்கிறது. மொத்தம் 26 ரயில்களை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத் தொகை ரூ.946.92 கோடியாகும்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தப் புதிய ரயில்கள் தயாரிக்கப்பட்டு மெட்ரோ ரயில்வே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாற்பது மாதங்களுக்குள் அனைத்து ரயில்களும் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்குப் பயிற்சி, உதிரிப் பாகங்கள் வழங்கல், குறைபாடு பொறுப்பு ஆகிய அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கி உள்ளன.
"ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) தயாரிக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சுமார் ரூ.63,200 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.