சென்னை: சென்னையில் கடந்த இரு நாள்களாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் கடந்த இரு நாள்களாக கிருமிப் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. அத்துடன், பண்டிகைக் கால விடுமுறை தினங்களும் நெருங்கி வரும் நிலையில், கொவிட் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 'இன்ஃப்ளுயன்ஸா' என்ற சளிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அணுக்கமாகக் கண்காணிப்பதில் அதிக அக்கறை காட்டவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மாநிலத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கும் நிலையில், சாதாரண காய்ச்சலும் சளிக்காய்ச்சலும் பரவி வருகின்றன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரியவர்களைவிட குழந்தைகளே இக்காய்ச்சலால் அதிகள வில் பாதிக்கப்பட்டு வரும் நிலை யில், தமிழகத்தில் இக்காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இக்காய்ச்சலுக்கு 282 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், "கொவிட்-19 அலைகளின் தாக்கத்துக்குப் பின்னர், பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள மழலையர் இந்த சளிக்காய்ச்சலால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,'' என சென்னை அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
"திடீர் வெயில், திடீர் மழை என பருவநிலை மாறிமாறி வருவதால் காய்ச்சல் பாதிப்பு கூடியுள்ளது.
"கொவிட்-19 பெருந்தொற்று பரவிய இரண்டாண்டு காலத்தில் மழலையரும் மாணவர்களும் வீட்டுக்குள் இருந்ததால் எல்லாவகையான காய்ச்சலில் இருந்தும் பாதுகாப்பாக இருந்தனர்.
"தற்போது கூட்டமாக பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளனர். திடீர் பருவநிலை மாற்றத்தால் கிருமித் தாக்கம், காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக மழலையர் பள்ளி மாணவர்கள் அதி களவில் பாதிக்கப்படுகின்றனர்.
"எனவே, தேர்வை தள்ளிவைப்பது நல்லது. தேர்வுக்கு முன்பே விடுமுறை அளிக்கலாம். வெளியில் செல்வதைத் தவிர்த்தாலே கிருமித் தாக்கம் குறைந்துவிடும்," என மருத்துவர் ஜெயகுமார் ரெட்டி கூறியுள்ளார்.