காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் சென்னை மெரினா கடற்கரை
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மெரினா கடற்கரைக்கு காவல்துறை சீல் வைத்துள்ளது.
காவல்துறையின் தடையை மீறி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்கு அவருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடி நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
மீனம்பாக்கம், சென்ட்ரல், மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்ல அரங்கம், பல்லாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இதையடுத்து இந்த நான்கு இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாகக் கூடுவர் என்றும் பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
காவல்துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் பங்கேற்கும் கூட்டங்களுக்குள் ஊடுருவி மறைத்து வைத்துள்ள கறுப்புக்கொடி காட்ட காங்கிரசார் முயற்சி செய்யக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, சென்னை மாநகரில் காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 26 ஆயிரம் காவலர்கள் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை காரிலேயே பயணம் மேற்கொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி. எனவே சாலையின் இருபுறங்களிலும் பாஜகவினர் திரளாகக் கூடி நின்று அவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க உள்ளனர்.
எனினும், பாஜகவினருக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியினரும் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்ட முயற்சி செய்வர் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரசார் திரளாகப் பங்கேற்க அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.