சென்னை: அண்மையில் பெய்த கனமழை தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் மாண்டுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே சில சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1.83 லட்சம் ஹெக்டர் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தால் அங்குள்ள ஏரல் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மொத்தமாக 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த மீட்பு பணிகளில் சுமார் 3,400 பேர் ஈடுபட்டனர் என்றும் அவர் கூறியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் 323 படகுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
“அனைத்துப் பகுதிகளிலும் சமுதாய சமையல்கூடம் மூலமாக உணவு தயாரிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட 49,707 பேரில், 17,161 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
“43 சமுதாய சமையல் கூடங்களிலும் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சமையல் கூடங்களிலும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஐந்து சமையல் கூடங்களில் இருந்து 75,000 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது,” என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுவரை ஐந்து லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4 மாவட்டங்களில் உள்ள 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 261 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.