மதுரை: தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மத நல்லிணக்க நாளாகவும் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மத நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் என்ற பெயரில் பரபரப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் ‘மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30’ என்று ரத்தத்துளிகள் சிதறும் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம், மத நல்லிணக்கம் பேணுவோம், தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சுவரொட்டிகள் மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பாக அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
அதில் மதவெறிக் கும்பலின் வன்மம் காந்தியார்மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், காந்தியின் நினைவு தினத்தையொட்டி திமுக கூட்டணிக் கட்சிகள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.