சேலம்: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி முதல் தொடங்கியது. 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், வியாழக்கிழமை (மார்ச் 28) 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
வேட்பு மனுவைப் பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.