மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக வாக்காளித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியது அனைவரும் நெகிழ வைத்திருக்கிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் முயற்சியில்
மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி இருந்தனர். வருகிற 19-ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்தக் கடிதம் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த கடிதத்தில் மாணவ, மாணவிகள் எழுதியிருப்பதாவது:-
“உங்கள் மகன், மகள் எழுதும் கடிதம். நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் அம்மா, அக்கா, அண்ணன், தம்பி எல்லோரும் நலமா? அப்பா, வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் தாங்கள் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்றுவதோடு, இத்தகவலை அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அக்கா, அண்ணன் உள்ளிட்டவர்களுக்கு தெரிவியுங்கள். அருகில் வசிக்கும் நமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி தவறாமல் வாக்களித்து எங்களுக்கு வழிகாட்டிட தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!
இத்துடன் 19ஆம் தேதி வாக்களித்த விரலின் அடையாள மையுடன் வீடு திரும்பும் அப்பா அம்மாவை வரவேற்கக் காத்திருக்கும் உங்களின் அன்பு மகன்/மகள் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.