ரச்சனா வேலாயுதம்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 18 மாதக் குழந்தையின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக இளையர்கள் ஐவர் புதுமையான முயற்சியில் இறங்கினர்.
லெனார்ட் சியாங், நிவன் ராஜ், ரோஷோஷன்னா டாங், கோ சென் பின், துங் வெய் சியோங் என்ற இந்த ஐவரும் கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் கைகளைத் தரையில் ஊன்றி, தலைகீழாக நடந்தனர்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இவர்களின் அந்தப் பெருமுயற்சி மாலை 6 மணிவரை நீடித்தது.
தலைகீழாக நின்று, கைகளால் பத்து, இருபது மீட்டர் தொலைவு நடப்பது, பின்னர் சில நொடிகள் ஓய்வெடுப்பது என்று, தளராமல் தங்களது முயற்சியை இவர்கள் தொடர்ந்தனர்.
மாலை நேரத்தில் மழை பெய்தபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் சிறிது நேர ஓய்விற்குப் பிறகு இவர்கள் ‘கை’நடை தொடர்ந்தது.
“எங்களால் முடிந்ததைச் செய்தோம். எங்களால் முடிந்தவரை தொடர்ந்து இதுபோன்ற உதவிகளைச் செய்துகொண்டே இருப்போம்,” என்றார் 26 வயதான நிவன் ராஜ்.
தலைகீழாக நடப்பது சவாலாக இருந்தது என்றும் இவர் சொன்னார்.
இதற்குமுன் வேறொரு நன்கொடைத் திரட்டிற்காக ஒரு கிலோமீட்டர் நடந்த இவர்கள், இம்முறை அதிக நிதி திரட்டும் நம்பிக்கையில் தங்களின் கைநடைப் பயணத்தை மும்மடங்காக அதிகப்படுத்தினர்.
முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஷமெல் எடிரியன் பிலபித்திய என்ற குழந்தையின் சிகிச்சைக்கு $3 மில்லியன் தேவைப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அத்தொகையைத் திரட்டியாக வேண்டும்.
இந்நிலையில், இந்த இளையர்களின் முயற்சிக்குக் கைகொடுக்க விரும்புவோர் https://gogetfunding.com/upsidedown2/ என்ற இணையப்பக்கம் வழியாக நன்கொடை வழங்கலாம்.
அத்துடன், குழந்தை ஷமெலுக்கு உதவ விரும்புபவர்கள் https://rayofhope.sg/campaign/baby-shamel/ என்ற இணையப்பக்கம் வழியாகவும் நிதியுதவி வழங்கலாம்.