ஜூரோங் பறவைப் பூங்காவின் 3,500 பறவைகளில் ஏறக்குறைய முக்கால்வாசி பறவைகள் புதிய மண்டாய் பறவைகள் மகிழ்வனத்திற்கு (Bird Paradise) மாற்றப்பட்டுள்ளன.
வரும் மே மாதம் 8ஆம் தேதி பறவைகள் மகிழ்வனம் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்குமுன் எஞ்சியுள்ள பறவைகளும் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்தது.
மூடப்பட்ட ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து மண்டாய் பறவைகள் மகிழ்வனத்திற்குப் பறவைகளை இடம் மாற்றும் பணி இவ்வாண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதாகக் குழுமத்தின் விலங்குப் பராமரிப்புப் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் லூயிஸ் நீவ்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
பறவை இடமாற்றம் இரண்டு அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மண்டாய் பறவைகள் மகிழ்வனம் புதிய பறவைகளை ஏற்கத் தயாராக இருப்பது, ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து எந்தப் பறவைகளை முதலில் இடமாற்றம் செய்வது என்பனவே அவை.
மாற்றப்படுவதற்கு முன்னால் பறவைகள் பலவற்றையும் கலந்து மண்டாய்க்கு அனுப்பும் பணியில் ஜூரோங் பறவைப் பூங்காவின் பறவைக் காப்பாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒன்றோடொன்று இணைந்து வாழக்கூடிய பறவைகளை இனம் கண்டு, அவற்றைப் புதிய இடத்திற்கு மாற்றினார்கள். அத்துடன், பறவைகள் தாங்களாகவே கூண்டுக்குள் நுழையவும் அவர்கள் பயிற்சி அளித்தனர்.