சீனாவின் உத்தேச நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்து நேற்று ஹாங்காங்கில் வரலாறு காணாத அளவில் மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதனையடுத்து புதிய ஆர்ப்பாட்டம் வரும் புதன்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஹாங்காங் ஆர்ப்பாட்ட குழுக்கள் தெரிவித்துள்ளன.
மனித உரிமைகள் முன்னணி எனும் அமைப்பு புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு பேரணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய கூட்டணியின் தலைவர் ஜிம்மி ஷாம் கூறியுள்ளார்.
சந்தேக நபர்களை ஹாங்காங்கிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்த இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் வழிவகுக்கும்.
ஹாங்காங் அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்காகக் கொண்டு சீனா இந்தச் சட்டத்தை செயல்படுத்த இருப்பதாக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சட்டம் குறித்து ஹாங்காங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதிக்கவிருப்பதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
சட்டத்தைத் தள்ளுபடி செய்தோ தாமதப்படுத்தவோ கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு மாறாக தலைவர் கேரி லாம் கூறியதையடுத்து புதிய பேரணி உருவாகவிருக்கிறது.
சர்ச்சைக்குரிய சட்டம் தேவை என்று கேரி லாம் கூறிவருகிறார். மனித உரிமை பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒரு மில்லியன் பேர் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆக அதிகமாக 240,000 பேர் கலந்துகொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்பாட்டாளர்களின் எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டால், பிரிட்டிஷ் அரசு 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைத்தபிறகு அங்கு நடந்த ஆகப் பெரிய ஆர்ப்பாட்டமாக அது வரலாற்றில் இடம்பெறும்.