ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 65ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயது 70ஆகவும் உயர்த்தப்படும்
இருநூற்றாண்டு நிறைவை சிங்கப்பூர் கொண்டாடி வரும் வேளையில் எதிர்காலத்திலும் வெற்றிகரமான நாடாகத் திகழ மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
பின்னணி எதுவாக இருப்பினும் ஒவ்வொரு இளையரும் வாழ்க்கையில் வெற்றிபெற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஒவ்வொருவரும் நீண்டகாலம் பணிபுரிய வழிவகுப்பது, பருவநிலை மாற்றத்தில் இருந்து சிங்கப்பூரைக் காத்து, அடுத்த நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் நாட்டைப் புதுப்பிப்பது ஆகியவையே அம்மூன்று அம்சங்கள்.
அங் மோ கியோவில் உள்ள மத்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது திரு லீ இவற்றைக் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரியில் இருந்து சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வேளையில் இந்தியர், யூரேசியர் எனப் பல்வேறு சமூகங்களும் தொழில் நிறுவனங்களும் பள்ளிகளும் தங்களுக்கே உரிய வழிகளில் அதனைக் கொண்டாடி வருவதாக அவர் சொன்னார்.சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரிய நடனம் தொடங்கி நூறாண்டுகள் ஆனதை நினைவுகூரும் விதமாக கடந்த ஏப்ரலில் ஐந்து இந்திய நடனக் குழுக்கள் இணைந்து எஸ்பிளனேடில் ‘நாட்டிய யாத்ரா’ எனும் நிகழ்ச்சியைப் படைத்ததை அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் செழுமையான வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக ஃபோர்ட் கேனிங்கில் இடம்பெற்று வரும் கண்காட்சியைப் பல நூறாயிரம் பேர் கண்டுகளித்துள்ள நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அது இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் பூசல் உலகப் பொருளியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூர் எப்பக்கமும் சாராமல் நடுநிலைமையைப் பேணும் என்று சொன்னார்.
இவ்வாண்டு நாட்டின் பொருளியல் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு மெதுவடைந்துள்ளதாகக் கூறிய அவர், அனைத்துலகத் தேவையும் வர்த்தகமும் சரிந்ததும் அதனால் நமது உற்பத்தி, வர்த்தகம் சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதுமே அதற்கு முக்கிய காரணம் என்றும் சுட்டினார். மேலும் விரிவான செய்திகள் தமிழ் முரசின் அச்சுப்பிரதியில்.