தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையின் முதல் கட்டம், அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் சீனப் புத்தாண்டுக்கு முன்னர் செயல்படத் தொடங்கும். மண்டாயின் ரயில் பணிமனைக்குச் சென்றிருந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இதனை வியாழக்கிழமை காலை (செப்டம்பர் 19ஆம் தேதி) அறிவித்தார்.
சீனப் புத்தாண்டு அடுத்த ஆண்டு ஜனவரி 25, 26ஆம் தேதிகளில் கொண்டாடப்படும்.
அதிகாரபூர்வ திறப்புக்கு முன் ரயில் பயணங்கள் இலவசம் என்று கூறிய திரு கோ, அந்நேரத்தில் பயணிகள் புதிய நிலையங்களைப் பற்றியும் ரயில் பாதைகளுக்கு இடையிலான இணைப்பைப் பற்றியும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம் என்று சொன்னார்.
சிங்கப்பூரின் இந்த ஆறாவது ரயில்பாதை 32 நிலையங்களைக் கொண்டிருக்கும். இதன் நீளம் 43 கிலோமீட்டர். பல்வேறு கட்டங்களாகத் திறக்கப்படும் இந்த ரயில்பாதையின் முதல் கட்டம் இவ்வாண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் திறக்கப்படும் என்று அவர் ஜனவரியில் முன்னதாகக் கூறியிருந்தார்.
முதல் கட்டத்தில் இயங்கப்போகும் ஒன்பது ரயில்கள் தற்போது மண்டாய் ரயில் பணிமனையில் உள்ளன. அவை சோதிக்கப்பட்ட பின்னர் அதிகாரபூர்வமாகச் செயல்படும். ஒட்டுமொத்த ரயில்பாதை கட்டமைப்புக்கான முழு சோதனை டிசம்பர் பள்ளி விடுமுறையின்போது நடத்தப்படும்.
தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் திட்டம் சிக்கலானது எனக் கூறினார் திரு கோ.நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்பாதைக்காகப் பல்வேறு மண் வகைகளுக்கும் கற்களுக்கும் இடையே சுரங்கங்கள் தோண்டி அமைக்கப்பட வேண்டியிருந்தது.
100,000க்கும் அதிகமான கனசதுர அளவு கிரேனைட் கற்கள் தகர்க்கப்படவேண்டியிருந்தது. இக்கற்கள் 40 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய கொள்ளளவைக் கொண்டவை.
நிலப்போக்குவரத்து ஆணையமும் கட்டுமானக் குத்தகை நிறுவனங்களும், அருகில் இருந்த ரிபப்ளிக் பலதுறைத் தொழில்கல்லூரிக்கு அதிக இரைச்சல் ஏற்படாதவண்ணம், மின்சாரத் தகர்ப்புக்கருவிகளுடன் இப்பணிகளை நிறைவேற்றின.
“நீண்ட காலத்திற்கு நாம் எப்படித் திட்டமிடுகிறோம் என்பதற்கு தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை நல்ல உதாரணம்,” என்றார் திரு கோ.