அண்மைக் காலத்தில் இரண்டாவது முறையாக, சிங்கப்பூர் முழுவதும் அமைந்துள்ள சமூக மன்றங்கள், வசிப்போர் குழு நிலையங்கள் ஆகியவற்றுக்கு நேற்று சென்று சிங்கப்பூர்வாசிகள் முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டனர். இம்முறை அவர்கள் மறுபடியும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஒரு சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தும் அவர்களுக்கு அறிகுறிகள் தென்படாதது பற்றி ஆதாரம் இருப்பதால், நலமாக இருப்பவர்கள் முகக்கவசங்கள் அணிய தேவையில்லை என அரசாங்கம் இனி கூறாது என்று பிரதமர் லீ சியன் லூங் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, மறுபடியும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி இம்மாதம் 12ஆம் தேதி வரை குறிப்பிடப்பட்ட சமூக மன்றங்கள், வசிப்போர் குழு நிலையங்களில் அந்த முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இன்று முகக்கவசங்களைப் பெற வந்தவர்கள் வரிசையில் நிற்க தூர இடைவெளி நடைமுறை நடப்பில் இருந்தது. குடியிருப்பாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களது உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
முகக்கவசங்களை விநியோகித்த மக்கள் கழக ஊழியர்கள் மற்றும் தொண்டூழியர்கள் முகக்கவசங்கள், கையுறைகளை அணிந்திருந்தனர்.
பயன்படுத்திவிட்டு வீசிவிடக்கூடிய முகக்கவசங்களை அணிந்து பழக்கப்பட்டுப்போன ஒரு சிலருக்கு மறுபடியும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை அணிவதில் அவ்வளவு பரிட்சயம் இல்லாதது தெரிந்தது.
மறுபடியும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் கறுப்பு, சாம்பல் நிறங்களில் வருகின்றன. அவை இரு அளவுகளில் வருகின்றன.
நீ சூன் சவுத் சமூக மன்றத்திற்கு இன்று வருகையளித்த நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா, முகக்கவசங்களை விநியோகிப்பதற்கான நடைமுறை சுமூகமாக இருந்ததாகவும் சுமார் 10 நிமிடங்களில் அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
“முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ள ஒரு வார அவசாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவசரப்பட தேவையில்லை,” என்று அவர் வலியுறுத்தினார்.
பொத்தோங் பாசிர் சமூக மன்றத்தில் குடியிருப்பாளர்கள் ஐந்து நிமிடங்களில் முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக பொத்தோங் பாசிர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீத்தோ யீ பின் கூறினார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி, ராடின் மாஸ் தனித்தொகுதி ஆகியவற்றில் உள்ள முகக்கவச விநியோக நிலையங்களுக்கு வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் வருகையளித்தார். தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், குடியிருப்பாளர்கள் முகக்கவசங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடிந்ததாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
“அனைவரும் நிதானத்துடன் செயல்பட்டு முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருகிறது. நமது தொண்டூழியர்களும் ஊழியர்களும் சிறந்த உணர்வில் இருந்தனர்,” என்று அவர் கூறினார்.
தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து குடியிருப்பாளர்கள் பலர் முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ள வந்ததைத் தாம் கவனித்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் சான், ஒரே இடத்தில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த இந்த நடைமுறை ஊக்குவிக்கப்படுவதாகச் சொன்னார்.