பொங்கோலில் உள்ள ‘எஸ்11’ தங்கும் விடுதியிலும் தோ குவானில் உள்ள ‘வெஸ்ட்லைட்’ தங்கும் விடுதியிலும் அதிகமானோருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த இரு வளாகங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த இரு வளாகங்களில் தங்கியுள்ள கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் அடுத்த 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இதுவரை இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் இன்று 120 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அவர்களில் நால்வர் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மற்ற 116 பேர் உள்ளூரில் பரவிய கிருமித்தொற்று சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள்.
உள்ளூர் சம்பவங்களில் 39 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். நீண்டகால வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 76 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது.
இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 1,309 பேருக்குக் கிருமித் தொற்று உறுதியாகியுள்ளது.
‘எஸ்11’ தங்கும் விடுதியில் நேற்று 22 புதிய சம்பவங்கள் உறுதியானதையடுத்து மொத்தம் இதுவரையில் அங்கு 62 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் மொத்தம் 13,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ளனர்.
‘வெஸ்ட்லைட்’ தங்கும் விடுதியில் இன்று 10 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனையடுத்து அங்கு இதுவரை குறைந்தது 28 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது. அந்த விடுதியில் சுமார் 6,800 ஊழியர்கள் தங்கியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட இந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைத் தவிர, நாட்டின் இதர விடுதிகளிலும் குடியிருப்பாளர்களுக்கு மத்தியில் உறவாடுவதைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. வளாகத்திலுள்ள வெவ்வேறு கட்டடங்களுக்கு இடையே குடியிருப்பாளர்கள் கலந்துறவாடுவதைத் தடுப்பதும் வெவ்வேறு தளங்களில் வசிப்போர் சந்திப்பதைத் தடுப்பதும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
உணவருந்தும் நேரமும் வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் நேரமும் சந்திப்புகளைக் குறைக்கும் நோக்கில் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு தங்கும் இடங்களுக்கு மாற்றப்படுவர். அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்தில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என்றும் தாய்நாடுகளில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு பணம் அனுப்பும் வசதி செய்து தரப்படும் என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அனைவரின் சுகாதாரத்தையும் நலனையும் உறுதிசெய்வதே நமது முக்கிய நோக்கம் என்றும் சிங்கப்பூரர்களுக்கு மட்டுமல்லாமல் நமது பெருளியலுக்கு உதவும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அது பொருந்தும் என்றும் திருமதி டியோ தெரிவித்தார். வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
கவலைக்குரிய வகையில் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு புதிய கிருமித்தொற்று குழுமங்களில் மூன்று தங்கும் விடுதிகள் அடங்கும். அவை சுங்காய் தெங்கா லாட்ஜ், தோ குவான் தங்கும் விடுதி, கொக்ரேன் லாட்ஜ் 2 தங்கும் விடுதிகள்.