உலகிலேயே மிகப் பெரிய அளவிலான மிதக்கும் சூரிய சக்தி தோட்டம் அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் செயல்படத்தொடங்கும். அதற்கான பணிகள் துவாசில் தொடங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தெங்கா நீர்த்தேக்கத்தில் இந்த சூரிய சக்தி தோட்டம் அமைக்கப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான காலகட்டத்தில் வெயில் நிலவக்கூடிய சிங்கப்பூரில், சுமார் 45 காற்பந்துத் திடல்களின் அளவுக்கு அமைக்கப்படவுள்ள இந்த சூரிய சக்தி மின்கலன்கள் மின்னாற்றலை உற்பத்திசெய்யும்.
இதன் மூலம் கரிம வெளியீட்டைக் குறைக்க முடிவதுடன், பருவநிலை மீட்டெழுச்சிக்கான பங்கையும் நாடு வலுப்படுத்த முடியும் என தேசிய தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இன்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமான செம்ப்கார்ப் ஃபுளோட்டிங் சோலார் சிங்கப்பூர் நிறுவனத்தால் கட்டப்படும் இந்த சூரிய சக்தி தோட்டம் அடுத்த ஆண்டு முழுவீச்சில் செயல்படத் தொடங்கியதும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஆண்டு ஆற்றல் தேவைகளில் 7 விழுக்காட்டை அது உற்பத்தி செய்யும். அதாவது, சுமார் 16,000 நான்கறை வீடுகளின் ஓராண்டுக்கான ஆற்றல் தேவைகளை அது பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்னாற்றலை உற்பத்தி செய்யும்.
இந்தப் புதிய கட்டமைப்பால், சுமார் 7,000 கார்களிலிருந்து வெளிப்படக்கூடிய அளவான, சுமார் 32 கிலோ டன் கரிம வெளியீடும் குறைக்கப்படும்.
நீண்டகாலத்துக்கு உழைக்கக்கூடிய வகையில், சிங்கப்பூரின் பருவநிலையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாக செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான வோங் கிம் யிம் குறிப்பிட்டார்.