கருணையைப் பொறுத்த வரையில் தனக்கு ஏகபோக உரிமை இருக்கிறது என்று யாருமே அனுமானித்துக் கொள்ளக் கூடாது என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறைந்தபட்ச சம்பளம், கொள்கை உருவாக்கம் ஆகியவை பற்றி பாட்டாளிக் கட்சி உறுப்பினர் இணை பேராசிரியர் ஜேமஸ் லிம் தெரிவித்த கருத்துகளை நிராகரித்து விளக்கம் அளித்தபோது திரு தர்மன் அவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றத்தில் செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் பேராசிரியர் லிம் முதன்முதலாக நேற்று உரையாற்றினார். கொள்கைகளை உருவாக்கும்போது பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அதிக கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கும் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விவாதம் நடந்தது. அப்போது தலையிட்ட திரு தர்மன் மேற்கண்டவாறு விளக்கம் அளித்தார்.
கடந்த சில நாட்களாக மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் பலரும் மன்றத்தில் ஆற்றி வரும் உரை தம்மை கவர்ந்து விட்டதாக திரு தர்மன் கூறினார்.
அப்போது பேசிய திரு தர்மன், கருணையைப் பொறுத்தவரையில் யாருக்குமே ஏகபோக உரிமை என்பது கிடையாது. யாரும் அத்தகைய உரிமை தனக்கு இருப்பதாக அனுமானித்துக்கொள்ளவும் கூடாது என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஆற்றலில்தான் கவனம் செலுத்துகிறது. சமத்துவத்தை சாதிப்பதில் அது கவனம் செலுத்துவதில்லை என்பவை போன்ற அர்த்தமில்லாத வாதங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் லிம்முக்கு திரு தர்மன் அறிவுரை கூறினார். சிங்கப்பூரில் குறைந்தபட்ச சம்பளம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் லிம் கோரிக்கை விடுத்திருந்தார்.
‘படிப்படியான சம்பள உயர்வு முன்மாதிரி’ என்ற ஏற்பாடு இப்போது நடப்பில் இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறிய பேராசிரியர் லிம், அத்தகைய ஏற்பாடு எல்லாருக்கும் பொதுவானதாக அல்லாமல் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கிறது என்றார்.
இதற்குப் பதிலளித்த திரு தர்மன், ஆகக் குறைவாகச் சம்பளம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டியது முக்கியம் என்று அரசாங்கம் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இதில் கணிசமான முதலீடு சாதிக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்ட திரு தர்மன், இதில் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
படிப்படியான சம்பள உயர்வு முன்மாதிரிக்கும் குறைந்தபட்ச சம்பள ஏற்பாட்டிற்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகளை பிரம்மாண்ட முறையில் மிகைப்படுத்தக் கூடாது என்று அவர் பேராசிரியர் லிம்மிடம் குறிப்பிட்டார்.
ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பது சிக்கலான நடைமுறை என்பதைச் சுட்டிய அவர், ஊழியர் ஒருவர் பெருமைப்படத்தக்க வேலையைப் பெற்று ஊதியத்தை ஈட்டுவதற்கான ஆற்றலை இழந்துவிடாத வகையில் இந்த விவகாரத்தை எப்படி சாதிப்பது என்பது ஒரு பிரச்சினை என்று தெரிவித்தார்.
படிப்படியான சம்பள உயர்வு முன்மாதிரி, ஊழியர் அணிக்கான மானியங்கள் மற்றும் இதர பல வழிகளுடன் சிங்கப்பூர் பலவற்றைச் செய்து வருகிறது என்று கூறிய அவர், இதில் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டி இருக்கிறது என்றார்.
சமத்துவ சரிசம நிலைக்கும் ஆற்றலுக்கும் இடைப்பட்ட சமரசம் தொடர்பில் தான் பேசியபோது அர்த்தமற்ற விவாதங்களில் ஈடுபடவில்லை என்றும் பேராசிரியர் லிம் குறிப்பிட்டார்.
ஆற்றலைவிட சமத்துவத்துக்கு ஆதரவான திசையில் சிங்கப்பூர் மேலும் முன்னேற்றமடைய முடியும் என்பதுதான் தனது வாதம் என்றும் அவர் தெரிவித்தார்.