கொவிட்-19 தொடர்பிலான நாசித் திரவச் சோதனையை எளிதாக மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் தானியக்க இயந்திர மனிதனை (ரோபோட்) உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் நாசித் திரவப் பரிசோதனையை மேற்கொள்ளும் நோயாளிகள் பாதுகாப்பான, வசதியான முறையில் விரைவாக சோதனையை முடித்துக்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபோன்ற இயந்திர மனிதனை மற்ற நாடுகளும் உருவாக்கியிருந்தாலும், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம், நோயாளியே தனது வசதிக்கேற்ப கையாளும் ஆற்றலைப் பெற்றுள்ளது. நோயாளி ஒருவர் எவ்வாறு கண் பரிசோதனை இயந்திரத்தின் முன் அமர்கிறாரோ அவ்வாறே ‘சுவாப்போட்’ என்று அழைக்கப்படும் இந்த இயந்திரத்தின் முன் அமர்கிறார்.
பின்னர் இயந்திரத்தில் உள்ள கைப்பிடிகளை இரு கைகளாலும் பிடித்துக்கொள்கிறார். பிறகு தனது மூக்குத் துவாரத்தை இயந்திரத்தில் உள்ள பகுதியில் அழுத்துவார். அவர் தயாரானதும், அவர் தனது தாடையைக் கொண்டு பொத்தானை அழுத்தி இயந்திரத்தை இயக்குவார்.
பொதுவாக மூக்குத் துவாரத்துக்கும் மூக்கின் அடிப்பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 10 செண்டிமீட்டர். மூக்குத் துவாரத்துக்குள் சோதனைக் குச்சி செல்லும்போது ஏதேனும் அசைவு உணரப்பட்டால், இயந்திரம் சோதனைக் குச்சியை மூக்குத் துவாரத்திலிருந்து வெளியே எடுத்துவிடும். அப்போது நோயாளி இயந்திரத்திலிருந்து தலையை அகற்றி சோதனையை முடித்துக்கொள்ளலாம்.
முழுப் பரிசோதனையும் 20 வினாடிகளுக்குள் முடிவடைந்து விடும். ஒப்புநோக்க முன்பு மேற்கொள்ளப்பட்ட நாசித்திரவச் சோதனை இரு மடங்கு நேரம் பிடிக்கும். பரிசோதனை முடிந்தவுடன், மருத்துவப் பணியாளர்கள் இயந்திரத்துக்குள் இருக்கும் சோதனைக் குச்சியை அகற்றுவார்கள். பின்னர் இந்த இயந்திரத்தின் உள்பகுதி உட்பட அனைத்து இடங்களும் கிருமிநாசினி திரவத்தால் சுத்தம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மூக்குப் பகுதி மட்டும் அடுத்த பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தப்படும்.
35 செண்டிமீட்டர் நீளம், 40 செண்டிமீட்டர் அகலம், 49 செண்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த இயந்திரத்தை சிங்கப்பூர் புற்றுநோய் சிகிச்சை நிலையம், சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து ‘பையோபோட் சர்ஜிக்கல்’ எனும் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கின.
“கொவிட்-19 பரிசோதனையின் போது கிருமித்தொற்று சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று எங்கள் குழு எண்ணியது. பரிசோதனையின்போது நோயாளி தும்மக்கூடும் அல்லது இருமக்கூடும். அப்போது அருகில் உள்ள சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து உண்டு,” என்றார் சிங்கப்பூர் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் தலை, கழுத்து அறுவை சிகிச்சைப் பிரிவின் இணை மருத்துவ ஆலோசகர் ரெனா தர்மவான்.
இதுவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் பிரைட் விஷன் மருத்துவமனை ஆகியவற்றின் 85 நோயாளிகளும் தொண்டூழியர்களும் இந்த இயந்திரத்தில் பரிசோதனை செய்துகொண்டனர். அவர்கள் அனைவரும் இந்த இயந்திரத்தில் பருசோதனை செய்துகொள்வது எளிதாக உள்ளது என்று கூறினர்.
இவ்வாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட இயந்திர மனிதன் உருவாக்கப் பணி மூன்று மாதங்களில் நிறைவு பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.