எஸ்எம்ஆர்டியின் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் செல்ல 40 புதிய ரயில்வண்டிகளை நிலப் போக்குவரத்து ஆணையம் வாங்கியுள்ளது. சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இரண்டு ரயில் பாதைகளான இந்தப் பாதைகளுக்கான புதுப்பிப்புப் பணிகள் தொடங்கியுள்ள நேரத்தில் மொத்தம் 337.8 மில்லியன் மதிப்பிலான இந்த ரயில்கள், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ரயில் தடங்களில் இயங்கி கொண்டிருந்த சீமன்ஸ் மற்றும் கவாசாக்கி-நிப்போன் ஷர்யோ ரயில்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும்.
இந்தப் புதிய ரயில்கள் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இயங்கத் தொடங்கும். பயண விவரங்களைக் காண்பிக்கும் புதிய எல்சிடி திரைகளும், சக்கர நாற்காலி மற்றும் குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளுக்குக் கூடுதல் இடம் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை இந்த ரயில்கள் கொண்டிருக்கும்.
‘பொம்பார்டிய டிரான்ஸ்போர்ட்டேஷன்’ நிறுவனத்துடன் எஸ்எம்ஆர்டி தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் இருந்து எஸ்எம்ஆர்டி 66 ரயில்களைத் தருவித்துள்ளது.
இந்தப் புதிய நடவடிக்கையுடன் 2012ஆம் ஆண்டு தொடங்கிய சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்புக்கான புதுப்பிப்புப் பொருந்திட்டம் கிட்டத்தட்ட பாதி அளவில் நிறைவடைந்துள்ளது. மாற்றங்களைச் செய்வது தொடர்பிலான சவாலான செயல்முறைகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங், இன்று நடைபெற்ற குத்தகை கையெழுத்து நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.