புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டம் ஒன்றின்வழி இனி கட்டுமான நிறுவனங்கள், ஒரே இடத்தில் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று அறிவித்தது.
இதன்படி நிறுவனங்கள் தங்களின் திட்டங்களைச் சமர்ப்பிக்கவும் செயல்படுத்தவும் வெவ்வேறு அமைப்புகளை நாடிச் சென்று ஆதரவுத் திரட்டும் தேவை இருக்காது.
மேலும் புதிய திறன் கட்டமைப்பு ஒன்றின் மூலம் கட்டடச் சுற்றுச்சூழல் தொழில்துறையில் சேரவோ முன்னேறவோ விரும்பும் நபர்கள் தங்களின் வாழ்க்கைத்தொழில் பாதையைத் திட்டமிட முடியும் என்று தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நேற்று கூறினார்.
பிரதமர் அலுவலக துணை அமைச்சராகவும் உள்ள திரு டான், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களில் பெரும்பாலானவை மீண்டும் துவங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியபோதும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் குத்தகையாளர்கள் கடைப்பிடித்ததால் கட்டுமானப் பணிகள் மீது இருந்த தாக்கம் குறைந்தபட்சமாக இருந்தது என்று அவர் இணையக் கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.
கட்டுமானத் துறை போன்ற ஒரு சில தொழில்துறைகள் வெளிநாட்டு ஊழியர்களைப் பெரிதும் நம்பியிருக்கும் சூழலை கொவிட்-19 கொள்ளை நோய் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
எனவே இதுபோன்ற துறைகள் கூடுதல் மீள்திறன் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார் அவர்.
புதிய திறன் கட்டமைப்பைப் பற்றி பேசிய அமைச்சர் டான், கட்டுமானத் துறையில் 49 வேலைப் பொறுப்புகள் இருப்பதாக தெரிவித்தார். எட்டு வெவ்வேறு வாழ்க்கைத்தொழில் பாதைகளில் சென்று இப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.