கொவிட்-19 தொற்று பரவல் குறித்த கவலை சிங்கப்பூரர்களுக்கு மிகக் குறைவு என்றாலும் பொருளியல் மீட்சியில் அவர்களது நம்பிக்கை மிகவும் குறைவு என்று அண்மை ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
தங்களது வேலைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்த நம்பிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக ஆய்வில் பங்கேற்ற 500 சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோர் தெரிவித்தனர். இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்த விகிதம் ஆக அதிகம். அடுத்த ஆறு மாதங்களில் பொருளியல் மேம்படும் என்ற நம்பிக்கை சிங்கப்பூரர்களில் 27 விழுக்காட்டினருக்கு மட்டும் இருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனம் இப்சோஸ் தெரிவித்தது.
இணைய கருத்தாய்வை நடத்திய இப்சோஸ் நிறுவனம், கொவிட்-19 கிருமிப்பரவல் குறித்த கேள்விகளைத் தனது பங்கேற்பாளர்களிடம் கேட்டிருந்தது. மேற்கூறப்பட்ட ஆறு தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்கள் கொவிட்-19 விதிமுறைகளால் எப்படி தங்களது வாழ்க்கை முறையை மாற்றினர், அவர்களது குடும்ப வருமானம் மற்றும் செலவினம் எப்படி மாறின போன்ற விவரங்கள் இந்தக் கருத்தாய்வில் இடம்பெற்றன.
இந்த நாடுகளிலிருந்து வெவ்வேறு இனம் வயது, பாலினம், உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 500 பேர் ஆய்வு செய்யப்பட்டதாக இப்சோஸ் தெரிவித்தது.
கொரோனாகிருமி தொற்றியது குறித்து “மிகவும் கவலைப்படுகிறார்கள்” அல்லது “ஒரளவு கவலைப்படுகிறார்கள்” என்று 73 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இந்த விழுக்காடு பிலிப்பீன்சுக்கு 95 விழுக்காடாகவும் வியட்நாமுக்கும் மலேசியாவுக்கும் 93 விழுக்காடாகவும் உள்ளன. ஆயினும், வேலை பாதுகாப்பை பொறுத்த அளவில் தங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை என்று 56 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இந்த விகிதம் பிற நாடுகளுக்கு சராசரியாக 49 விழுக்காடாக உள்ளது.